நன்றி: தமிழ் லென்ஸ்
ஒரு சட்டமன்ற தொகுதியில் எத்தனை பிரச்சனைகளை இந்தியர்கள் எதிர்நோக்குகின்றனர் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
யாரைக் குற்றம் சொல்லுவது? சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லலாம். இல்லையென்றால் கோலகுபுபாரு சட்டமன்றத் தொகுதியில் ஏன் இத்தனை குளறுபடிகள்? அதுவும் குறிப்பாக இந்தியர்களின் பிரச்சனைகள் தானே முன் நிற்கின்றன?
அதே தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சத்தியபிரகாஷ நிலைமை என்ன? நைகல் கார்டனர் வீடமைப்பு பிரச்சனை, புக்கிட் தாகார் சாலை பிரச்சனை இவைகளுக்காக டாக்டர் சத்தியபிரகாஷ் என்ன செய்தார்? மேலே உள்ள செய்தியைப் படித்தாலே போதும். நீங்களே புரிந்து கொள்வீர்கள். "பிரதமரின் கவனைத்திற்குச் சேர்க்கப்பட்டது" என்கிறார் டாக்டர்! ஏன் சார்? இதைப் போன்ற Office Boy வேலைக்காகவா நீங்கள் அங்குள்ள மக்களைப் பிரதிநிதிக்கிறீர்கள்? அப்படியென்றால் உங்களுக்கு எந்த ஓர் அதிகாரமும் கிடையாதா?
தொகுதியின் ஒவ்வொரு வேலையும் பிரதமர் வந்து தான் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏன் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்? சின்ன சின்ன வேலைகளைக் கூட நீங்கள் வகிக்கும் அந்தப் பதவியால் முடியாது என்றால் அப்புறம் என்ன நாடாளுமன்ற உறுப்பினர்? மற்ற சீன, மலாய் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலை தானா அல்லது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமா?
ஆனாலும் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் குற்றம் என்னவோ நம்மிடமே உள்ளது என்று தான் நினைக்கிறேன். தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணம் அப்படியே இதுக்கப்பட்டு வேறு எங்கோ போய்ச் சேருகிறது என்று தான் தோன்றுகிறது! தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணம் அந்தத் தொகுதிக்காக செலவு செய்யப்பட வேண்டும். ஆனால் ஏன் செலவுசெய்யப்படவில்லை. அப்படியே மற்ற இனத்தவர்களுக்குச் செலவு செய்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் போய் சேருவதில்லை?
பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டது என்று சொல்லும் போதே ஏதோ ஒன்று சரியாக இல்லை! கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னத்தை வெட்டி முறித்தீர்கள்? இடைத்தேர்தல் வருகிற போதுதான் சாலைகளைப் பற்றியும், வீடுகளைப் பற்றியும் ஞாபகம் வருகிறதா? இப்போது தான் அதனைக் கொண்டு போய் பிரதமரிடம் சேர்த்தீர்களா? கொண்டுபோய் சேர்த்தோம் என்னும் போது அதற்கு விடிவு காலம் வராது என்பது தானே பொருள்!
அதனால் அந்தத் தொகுதி மக்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? நீங்கள் தொகுதிக்கு இலாயக்கில்லை என்று தானே அவர்கள் நினைப்பார்கள்? சரி, தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதன்படி அவர்கள் வாக்களிக்கட்டும்! நீங்கள் அடுத்த தேர்தல் வரும்வரை தபால்காரராகவே இருந்துவிட்டுப் போங்கள்!
No comments:
Post a Comment