பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைப் பற்றிய நமது நிலை என்னவாக இருக்க வேண்டும்?
ஒன்று மட்டும் உறுதி. அவர்கள் நிச்சயமாக இந்தியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க மாட்டார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
ஏற்கனவே நாம் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பிரதமராகப் பதவி வகித்த போதும் சரி அல்லது அதற்கு முன்பும் பதவியில் இருந்த போதும் சரி அவர் இந்தியர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்களின் குடியுரிமை, மெட் ரிகுலேஷன் கல்வி போன்றவைகளில் எதிராகத்தான் செயல்பட்டார். பாஸ் கட்சியினர் எல்லா வகையிலும் இந்தியர்களுக்கு எதிரானவர்கள் தான். மலேசியர் ஒற்றுமை பற்றியெல்லாம் கவலைப்படாதவர்கள்.
ஆளுங்கட்சியின் மீது அதிருப்தி இருந்தால் உங்கள் வாக்குகளைப் போடுவதற்கு வேறு வழிகள் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர்த்து மேலும் இரண்டு கட்சிகள் போட்டியில் உள்ளன. நான்குமுனை போட்டிதானே இன்னும் இரண்டு முனைகள் காத்துக் கிடக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்! அது வீணடிப்பு என்பது உண்மை தான். தேர்தலை புறக்கணிப்பதைவிட உங்களது ஜனநாயகக் கடமையை இப்படி நிறைவேற்றலாமே!
எது எப்படி இருந்தாலும் பெரிகாத்தான் நேஷனலை ஆதரிப்பது என்பது பல்லின சமுதாயத்திற்கு ஏற்றதல்ல. பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிப்பது பாஸ் கட்சி தான். பாஸ் கட்சி ஆளும் மாநிலங்களைப் பாருங்கள். மாநிலங்களுக்கு அவர்கள் கொண்டுவந்த முன்னேற்றத்தைக் கவனியுங்கள் முன்னேற்றத்திற்கு எதிரானவர்கள் அவர்கள். ஒன்றுமே செய்யாமல் "எல்லாம் அவன் செயல்" என்று கூறுபவர்கள்! எந்த ஒரு முன்னேற்றம் இல்லாததால் அவ்ர்களின் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில், வெளி ஊர்களில் அதிகமாக வேலை வாய்ப்பைத் தேடி ஓடுகின்றனர்!
என்னைக் கேட்டால் அவர்களை ஆதரிப்பதே வீண். நாட்டின் முன்னேற்றம், மக்களின் முன்னேற்றம் என்று சொன்னாலே சிரிக்கும் கூட்டம் அது! இவர்களால் எதுவும் ஆகப்போவதில்லை. இவர்களை ஆதரிப்போம் என்று மட்டும் சொல்லாதீர்கள்.
இவர்களுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம் என்று துணிவோடு சொல்லுங்கள்!
No comments:
Post a Comment