Tuesday 9 October 2018

பிடி தளர்கிறதா...?


பிடி என்றதும் தேர்தல் நடக்கப் போகும் பிடி அல்ல. இது  வேறு பிடி.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் என்றால் தெரியாதவர் யாரும் இல்லை. நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சங்கத்தின் தலைவராயிருப்பவர் டான்ஸ்ரீ கே.சோமசுந்தரம் என்பதையும் நாம்  அறிவோம். என்னுடைய கேள்வி சங்கத்தில் அவருடைய பிடி தளர்கிறதா என்பது தான்.  காரணம் அவருடைய வயதை வைத்துப் பார்க்கும் போது அப்படி ஒரு கேள்வி எழுவது இயல்பு தான்.

 இந்தச் சங்கம் எப்போது உதயமானதோ அப்போதிருந்தே நான் அதனுடன் தொடர்பில் உள்ளவன். இத்தனை ஆண்டுகளாக அங்கிருந்து எனக்குக் கடிதங்கள் வந்திருக்கின்றன. அப்போது,  எனது நினைவு சரியாக இருந்தால், அந்தக் கடிதங்களின் மேல் கடித உறையில் ஆங்கிலத்தோடு தமிழ் எழுதப்பட்டிருக்கும். தமிழ் மொழியின் கீழ் தான் ஆங்கிலம் எழுதப்பட்டிருக்கும். இதில் ஒன்றும் அதிசயமல்ல. இது எப்போதும் உள்ள நடைமுறை தான்.

ஆனால் சமீபகாலமாக அந்த உறையில் தமிழ் தவிர்க்கப்பட்டிருக்கிறது. காரணம் தெரியவில்லை. அதனால் தான் நாம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது.  ஏன் தமிழைத் தவிர்க்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் ஒரு தமிழர். இந்தச் சங்கத்தின் தமிழர் ஒருவர் இருப்பது இதுவே கடைசியாக இருக்குமோ?  நாம் எல்லாக் காலங்களிலும்  உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் வல்லவர்கள்! கூட்டுறவு சங்கத்தின் அடுத்த தலைவர் தமிழராக இருக்க வழியில்லை! ஆனால் அந்தத் தலைமைத்துவம் மீண்டும் தமிழருக்குக் கிடைக்காது என்பதை இப்போதே ஒரளவு ஊகிக்கலாம். காரணம் அதை நாம் இப்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வருபவர்கள் தமிழுக்கு எந்த அளவு ஆதரவு கொடுப்பார்கள் என்பதும் உறுதியில்லை. இப்போதே ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பிறகு எப்போது?

இப்போதே நாம் எதையாவது செய்ய வேண்டும். 

தலைவரின் பிடி தளர்கிறது என்றே தோன்றுகிறது! நாம் என்ன செய்யலாம்? இப்போது விட்டுக் கொடுத்தால் எப்போதுமே விட்டுக் கொடுக்க வேண்டி வரும்!

No comments:

Post a Comment