தமிழ் நாட்டில் சாராயத்தை வைத்து எப்படி தமிழனை கவிழ்க்கிறார்கலோ அதே பாணியை இங்கும் பின் பற்றுகிறார்களோ என நினைக்க வேண்டி உள்ளது!
பாரிசான் ஆட்சியில் சாராயத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அது தமிழனின் "மானம் காக்கும்!" பானம் என்பதால் ஆட்சியாளர்கள் எந்த வித அக்கறையையும் எடுத்துக் கொள்வதில்லை! அந்த நிலை மீண்டும் வரக் கூடாது என்பது தான் நமது கவலை.
இன்றைய பக்காத்தான் ஆட்சியில் கள்ளச் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். காள்ளச் சாராயம் என்பதை விட மிகவும் கௌரவமாக நமது மளிகைக் கடைகளில் ஏதோ வெளி நாடுகளிலிருந்து விறபனைக்கு வரும் மது பானங்கள் போல விற்பனையில் இருக்கும் இந்த மலிவு விலை சரக்குகள் தடை செய்யப்பட வேண்டும்.
இந்த மலிவு விலை சரக்குகள் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தாராளமாக மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. இவர்களில் முதன்மையான வாடிக்கையாளர்கள் நமது குடிமகன்கள், இந்தியர்கள், நேப்பாளிகள், மியான்மார்கள், வங்காள தேசிகள் இன்னும் பலர்.
ஒர் இந்தியக் குடிமகன் ஒரு முறை காலையில் சாராயத்தில் பல் துலக்கி, முகங் கழுவி சாராயத்தையும் குடிப்பதைப் பார்த்திருக்கிறேன்! அவன் ஊரில் அந்த சுகம் அவனுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை!
ஆனாலும் யாராக இருந்தாலும் எந்த நாட்டினராக இருந்தாலும் நாம் இந்தக் குடி பழக்கத்தை வர வேற்க முடியாது. குடிப்பவன் குடும்பம் கடைசியில் நிற்பது நடுத் தெருவில் தான் . அதை இப்போதும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
நமது அரசாங்கம் இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. சாராயம் குடித்து ஒரு சீனன் இறந்தான் என்பதாக எந்த ஒரு செய்தியையும் நாம் படிப்பதில்லை. இந்த ஒரு பிரச்சனையில் மட்டும் நாம் தான் முன்னணியில் நிற்கிறோம்!
நம் நாட்டில் மது விலக்கு என்பது இல்லை. தரமான மது பானங்கள் விற்பனையில் இருக்கத்தான் செய்கின்றன. அதன் விலை சராசரி மனிதனுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இந்த மட்டமான சரக்குகள் எல்லா மளிகைக் கடைகளில் தாராளமாக கிடைக்கின்றன!
சாராயத்தை மளிகைக் கடை பொருளாக்கி விட்டனர் வியாபாரிகள்! மளிகைக் கடைகள் எங்கெங்கு இருக்கின்றனவோ அங்கெல்லாம் சாராயம் அமோகமாக விற்பனையில் இருக்கின்றன.
இந்த மலிவு விலை சரக்குகள் தடை செய்யப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment