Tuesday 4 June 2019

கோட்டா முறை இல்லை!

சமீபத்திய  ஒரு  நேர் காணலில், கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். 

புதிதாக ஒன்றுமில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு கருத்துத் தான்.  மெட்ரிகுலேஷன் தொடர்பான ஒரு பிரச்சனையில்  அவர் சொன்ன கருத்து:  "ஆறாம் படிவம் படிக்க எந்த வித கோட்டா முறையும் இல்லை"   என்று சொல்லியிருக்கிறார்.

அது உண்மை தான்.  கோட்டா முறை இல்லாதிருந்தும் மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்வியையே நாடுகிறார்கள் என்பது தான் அவர் பூமிபுத்ரா அல்லாத  மாணவர்களின் மேல்  வைக்கும் குற்றச்சாட்டு!

இதன் காரணம் என்ன  என்பது கல்வி அமைச்சர் அறியாதது அல்ல.  அதனை அவர் மறைத்து பூமிபுத்ரா அல்லாத  மாணவர்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்.

மெட் ரிகுலேஷன் கல்வியால் வரும் நன்மைகள் என்ன  என்பதையும் அனைத்து இன மாணவர்களும் ஏன் அதற்காகப் போராட்டம் நடுத்துகிறார்கள் என்பதும்  பெற்றோர்கள் மட்டும் அல்ல மாணவர்களுக்கும் தெரியும்.   மெட் ரிகுலேஷன் கல்வி என்பது பல்கலைக்கழகம் போக எளிமையான  ஒரு வழி!  மெட் ரிகுலேஷன் கல்வியை - அதன் தகுதியை - யாரும் ஏற்றுக் கொள்ளுவதில்லை!  அந்தக் கல்வியை வேலைக்காக பயன்படுத்த முடியாது!   அதனை முடித்து ஏதாவது ஒரு கல்வியைப் பல்கலைக்கழகங்களில்  தொடர வேண்டும்.  அந்தக் கல்வி அதனை உறுதிப்படுத்துகிறது.  மிக எளிமையான ஒரு வழி! மெட் ரிகுலேஷன் கல்வி என்பது பலகலைக்கழகத்தில் முடிகிறது.

ஆறாம் படிவமான (எஸ்.டி.பி.எம்) கல்வி அப்படி அல்ல.   அதன் சான்றிதழ்கள் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற ஒரு கல்வி முறை.  வேலைக்காகவும் பயன்படுத்தலாம்.  ஆனால் அதன் முக்கிய நோக்கம் பலகலைக்கழகம் போவது தான்.  வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களும்  அந்தக் கல்வி முறையை ஏற்றுக் கொள்ளுகின்றன.  வசதி படைத்தவர்கள் வெளி நாடுகளுக்குப் போகின்றனர். ஏழை, நடுத்தர குடும்பங்கள் உள்ளூரில் தான் படிக்க வேண்டும்.  ஆனால் இங்குள்ள பிரச்சனை இவர்களுக்கு  பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு என்பது தான்! அது தான் இங்குள்ள பிரச்சனை. 

ஆனால் கல்வி அமைச்சர் ஆறாம் படிவத்திற்கு கோட்டா முறை இல்லை என்கிறார். இருக்கட்டும்.  இவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு ஏன் வாய்ப்புக் கொடுப்பதில்லை என்பது தான் கேள்வி! குறைவான தகுதியுள்ள மெட் ரிகுலேஷன் மாணவர்கள் மேல் கல்வியைத் தொடர்கின்றனர். ஆனால் அதிகத் தகுதி உள்ள மாணவர்களுக்கு இடம் இல்லை என்று கையை விரிக்கின்றனர்! 

நாம் சொல்ல வருவதெல்லாம் ஆறாம் படிவத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இங்கு பயிலும் மாணவர்களுக்குக் கல்வி பயில வாய்ப்புக் கொடுங்கள் என்பது தான். இல்லாவிட்டால் ஏதாவது ஒன்றைத்  தேர்ந்தெடுத்து வருங்கால மாணவ சமுதாயத்திற்கு வழி காட்டியாய் இருங்கள்!

கோட்டா முறையை விட தகுதி முறையே சிறந்தது!

No comments:

Post a Comment