Tuesday, 3 December 2024

ஏன் இந்தப் பற்றாக்குறை?


 வேறு துறைகளில் பற்றாக்குறைகள் வரலாம்.  ஆனால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை  எப்படி வரமுடியும் என்பது நமக்குப் புரியவில்லை.

அதற்குத்தான் கலவி அமைச்சு என்று ஒன்று இருந்துகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்குப் பள்ளி சம்பந்தமான அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை ஆசிரியர்கள் ஒய்வு  பெறும் வயதை எட்டிவிட்டார்கள் அல்லது சீக்கிரமாகவே ஒய்வு பெற விண்ணப்பங்கள் செய்திருக்கிறார்கள்  அல்லது நோயின் காரணமாக வேலையை விடுகிறார்கள்  போன்ற அனைத்து விஷயங்களும்  கல்வி அமைச்சுக்கு அத்துப்படி.   காலியாகும் இடங்களை உடனடியாகப் பூர்த்தி செய்வது கலவி அமைச்சின் முக்கிய கடமை.

இது போன்ற காலியாகும் இடங்களுக்கு  ஆசிரியர்களைத் தயார் செய்வது கல்வி அமைச்சின் கையில் உள்ளது. கல்வி அமைச்சர் இந்த ஆண்டு இதுவரை சுமார் 14,000 ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.  தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமோ  ஆசிரியர் பணிக்குச் சுமார்  20,000 காலி இடங்கள் இருப்பதாகக் கூறுகிறது.

எது சரி, எது தவறு என்று பொது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை. கல்வி அமைச்சு சொல்வது உண்மை என நாம் எடுத்துக் கொள்கிறோம். நம்முடைய கவலை எல்லாம் மாணவர்களின் கல்வி எந்த வகையிலும்  பாதிக்கப்படக் கூடாது  என்பது மட்டும் தான்.

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில்  தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதைவிட  பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போக்கும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.  அதனால் கல்வித்தரம் குறையுமோ என்கிற அச்சமும்  நமக்கு உண்டு. ஆனாலும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சமாளிக்க பயிற்சி பெறாத தற்காலிக ஆசிரியர்கள்  தான் கை கொடுக்கின்றனர் என்பதையும் மறந்துவிட முடியாது.

பற்றாக்குறைக்குக் கல்வி அமைச்சு தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கல்வித்துறையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்துக்கும் கல்வி அமைச்சு தான் பதில் சொல்ல வேண்டும்.

எப்படியோ நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment