இன்றைய நிலையில் எந்த உணவு அல்லது பானம் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பது யாராலும் கணிக்க முடியாத நிலைமையில் தான் நாம் இருக்கிறோம். எல்லாமே 100 விழுக்காடு விலையேற்றம் என்றால் யார் என்ன செய்ய முடியும்? யார் தான் விலைகளைக் கட்டுப்படுத்த முடியும்? அதற்கென தனி அமைச்சு இருக்கத்தான் செய்கின்றது. இருந்தும் இது போன்ற விலையேற்றங்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன.
விலைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அதற்கு எதற்கு தனி அமைச்சு? தனி அமைச்சர்? வேலை செய்ய ஏகப்பட்ட வேலையாட்கள்? பணம் வீண் விரயம் என்பதைக் கூடவா அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை?
கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுப்பது மாதிரியும் தெரியவில்லை. எடுப்பார்கள் எனவும் நம்பிக்கையில்லை. என்னடா இது மலேசியர்களுக்கு வந்த சோதனை!
இப்போதெல்லாம் இந்திய. மாமாக் உணவகங்களில் விலையேற்றம் என்பது நாம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சொல்லுகின்ற காரணம்: விலைவாசி ஏற்றம். நமக்கும் புரிகிறது. விலையை ஏற்றிவிட்டீர்கள். விலையை ஏற்றிவிட்டு தரத்தைக் குறைத்துவிட்டிர்கள். இட்டிலி சிறிதாக மாறிவிட்டது. மீகொரங் வாங்கினால் ஒரு கீரை கூட கிடையாது.அளவும் குறைந்து போனது. விலையை ஏற்றிவிட்ட பிறகு ஏன் இது போன்ற தரக்குறைவான வேலையைச் செய்கிறார்கள் என்பது இன்றுவரை நமக்குப் புரியவில்லை.
ஒன்று விலையை ஏற்றுங்கள் ஆனால் தரம், அளவு அதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. பழைய நிலையிலேயே இருக்க வேண்டும். தரம், அளவு போன்றவைகளைக் குறைத்தால் விலையேற்றம் தேவை இல்லை. அது தான் தரம் குறைந்துவிட்டதே அப்புறம் ஏன் விலையேற்றம்? ஆனால் இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தரம், அளவு அனைத்தையும் குறைத்துவிட்டு அங்கும் இலாபம் பார்க்கிறீர்கள். விலையையும் ஏற்றி இங்கும் இலாபம் பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் உங்களுக்கும் சேர்த்துத்தான் அந்த நியாயம்!
No comments:
Post a Comment