கார் விபத்து ஒன்று நடந்துவிட்டது. அடுத்து நடக்க வேண்டியது என்ன?
அதனைக் காவால்துறைக்குப் புகார் செய்ய சென்ற பெண்ணுக்கு காவல்துறையில் வேறொரு புகார் அவர்மீது காத்திருந்தது!
ஆமாம்! அங்கிருந்த காவல்துறை அதிகாரிக்கு அந்தப் பெண் அணிந்திருந்த சிலுவார் அவரின் கண்களை உறுத்தியது. அவர் அந்தப் பெண்ணை காவல்நிலையத்திற்குள் வர அனுமதிக்கவில்லை! "முதலில் உன் சிலுவாரை மாற்றிவிட்டு வா! அதன் பின்னர் தான் நீ புகார் செய்ய முடியும்!" என்று கண்டிப்பாக கூறிவிட்டார்!
நாம் யாருக்கும் வக்காளத்து வாங்கவில்லை. அந்தப் பெண் அணிந்திருப்பது எது போன்ற சிலுவார் என்று கவனியுங்கள். அது முழுக்கால் சிலுவார் இல்லை என்பது உண்மை தான். அதே போல அரைக்கால் சிலுவாரும் இல்லை என்பதும் உண்மைதான். ஒரு முக்கால் கால் சிலுவார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! அதனால் என்ன கெட்டு விட்டது?
அந்தக் காவலர் அவரது காவல் நிலையத்தை புனிதமாக நினைப்பதில் தவறு இல்லை! ஆனால் அவரது முதல் வேலை புகார் கொண்டு வந்தால் அந்தப் புகாரைப் பெற வேண்டியது அவரது கடமை. புகாரை கண்டு கொள்ளாமல் அவரது ஆடையைப் பற்றி பேசி நேரத்தை வீணடிப்பது அவர் வேலையில்லாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. உடனடியாக பாஸ் கட்சியிலிருந்து அவரை நியாயப்படுத்தி அறிக்கைகள் வரும்.!அவர்களே அவரை அரசியலுக்கும் கொண்டு வரலாம்!
இந்த நேரத்தில் நாம் சொல்ல வேண்டியதும் உண்டு. உடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஒரே வழி. எந்த உடைகள் இந்த நாட்டு நலனுக்கு ஏற்ற உடைகள் அல்ல என்று பாஸ் கட்சியும் அரசாங்கமும் தீர்மானிக்கிறதோ அந்த ஆடைகளை தடை செய்து விடுங்கள். தடை செய்து விட்டால் மக்கள் இது போன்ற உடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம்!
இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதே கார் விபத்தில் அந்தப் பெண் மருத்துமனைக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தால், அங்கும் இதே போன்ற ஓர் அதிகாரி இருந்திருந்தால், அப்போது என்ன நடந்திருக்கும்? அங்கும் இவர்கள் சேவை இப்படித்தான் இருக்குமோ என்கிற பயம் இயற்கையாகவே வரத்தான் செய்கிறது!
அரசாங்கம் அல்லது அரசாங்க அதிகாரிகள் உடைகளைப் பற்றியான ஓரு தெளிவு பெற வேண்டும். இதையும் ஒரு பிரச்சனையாக்கி, இதையும் ஓர் அரசியலாக்கி, அது தொடர்வதை நிறுத்தப்பட வேண்டும்.