iஇந்திய மணவர்களைப் பற்றி அரசாங்கத்தின் கருத்து என்னவாக இருக்கும்? அவர்கள் சோம்பேறிகள், கல்வி கற்க முடியாத மூடர்கள் என்றா கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
நமது திறமை என்னவென்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் நமது கல்விமான்கள் தான் நிறைந்திருந்தனர். அப்படியிருக்க இப்போது மட்டும் நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்?
திறமைமிக்க ஓர் இனத்தை அவர்கள் கல்வி கற்கத் தடையாக இருப்பது யார்? அதுவும் கல்வி என்பது ஒரு சமுதாயத்திற்கு எந்த அளவு முக்கியம் என்பதை அறியாதவர்களா அரசாங்கத்தினர்? நம்மிடம் உள்ள பலவீனம் என்பதே பொருளாதாரம் தான். பொருளாதாரம் இருந்தால் தனியார் கல்வி நிலையங்கள் கை கொடுக்கும். பொருளாதாரத்தில் பலவீனமாக இருக்கிறோம் என்பதால் தான் நமக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மேற்கல்வி பயில நமது பொருளாதார நிலை நம்மைத் தடுக்கிறது. இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டு நிற்கின்றனர். அப்படியே வேலை இருந்தாலும் குறைந்த சம்பளம் வாங்கும் அவர்களால் பிள்ளைகளின் கல்வியில் சரியான கவனத்தைச் செக்லுத்த முடிவதில்லை.
இந்திய மாணவர்கள் மற்ற இன மாணவர்களோடு கல்வியில் சம அளவில் இருக்க வேண்டுமென்றால் அதனைச் சரிசெய்ய அரசாங்கத்தால் மட்டுமே முடியும். இன்றைய நிலையில் அரசாங்கம். உயர்க்கல்வி என்று வரும்போது, இந்திய மாணவர்களைப் புறக்கணிக்கிறது என்று அப்பட்டமாகத் தெரிகிறது. எந்த அக்கறையும் காட்டவில்லை என்பது புரிகிறது.
எல்லா சமுதாயமும் முன்னேற்றம் அடையும் போது ஒரு சமுதாயத்தினர் மட்டும் விடுபட்டால் அதனால் வரும் விபரீத விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அரசாங்கம் அறியும். நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தொடர்ந்து அரசாங்கம் புறந்தள்ளுகிறது. பாலஸ்தீனர்களுக்குப் பள்ளிகள் கட்டுவதும், மருத்துவமனைகள் கட்டுவதும் தவறு என்று மனிதாபிமானம் உள்ளவர்கள் சொல்லமாட்டார்கள். ஆனால் உள்நாட்டைப் புறக்கணித்துவிட்டு அங்குப் போய் கட்டுவது மனிதாபிமானம் அல்ல. இங்குள்ள ஏழ்மையைப் போக்க வேண்டும். வறுமையை ஒழிக்க வேண்டும். தனக்குப்பின் தான் தான தர்மம்.
இங்குள்ள மக்களுக்குச் சரியான பாதயைக் காட்டுங்கள். நாங்களும் முன்னேற வேண்டும். அதுவும் குறிப்பாகக் கல்வியில்.
No comments:
Post a Comment