காஸாவில் வாழும் மக்கள் சாதாரண வாழ்க்கையை வாழும் மக்கள் அல்ல . பிறக்கும் போதே குண்டு சத்தம், துப்பாக்கி சத்தம், விமானங்கள் சத்தம் - இப்படித்தான் அவர்கள் வாழ்ந்து பழகியவர்கள். அமைதி என்பது அவர்கள் நாட்டில் என்றுமே இருந்தது இல்லை. சமீபத்தில் மலேசியாவில் கூட அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்தோம். அதுதான் அவர்களின் இயல்பாக அமைந்துவிட்டது.
பிரதமர் அவர்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறார். அது மனிதாபிமானம் தான்.
பெரிகாத்தானைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சஞ்சீவன் சரியாகத்தான் கேட்டிருக்கிறார். அது இந்தியர்களின் குரலாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம். நாட்டில் இந்தியர்களிடேயான குறை பாடுகள் ஏராளம். அவர் கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகளை அவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இங்கு உள்ளூரில் அவர் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத சூழலில் அதற்குள் காஸாவிற்குத் தாவுவதா என்கிற ஆதங்கம் தான் அவர் எழுப்பிய கேள்விகள்.
இங்குள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாமல் எங்கோவுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதா என்பது சரிதான். அங்குப் போய் கோடிக்கணக்கில் செலவு செய்து பள்ளிக்கூடம், மருத்துவமனை, மசூதி இவைகளை எல்லாம் கட்டுவதும் பிழையில்ல. ஆனால் நாளை இஸ்ரேல்காரனிடம் கொஞ்சம் வம்பிழுத்தால் அவன் குண்டைப்போட்டு அனைத்தையும் தவிடுபொடியாக்கிடுவான். இதை வளைகுடா நாடுகள் அறிந்திருக்கின்றனர்.
அதனால் தான் அந்தப் பணத்தை உள்ளூரில் இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்தால் இங்கு நமக்குக் கொஞ்சம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பது தான் சஞ்சீவன் பேச்சின் மூலம் நாம் தெரிந்து கொள்வது. இப்போது நாம் நினைப்பதெல்லாம் காஸாவுக்குப் போகும் பணம் மலேசிய இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் என்று சொல்லப்படுவதை தவிர்க்க முடியாது.
இங்கு நாம் ஒதுக்கப்பட்டாலும் நமது பணம் அங்கேயாவது பயன்படுத்தப்படுகிறதே என்று நாம் மகிழ வேண்டியது தான்!
No comments:
Post a Comment