Wednesday, 8 January 2025

SPM எழுதும் மாணவர்களுக்கு



 

எஸ்.பி.எம். எழுதும் மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள். உங்களிடமிருந்து தான் நாளைய மருத்துவர்கள்,  மருத்துவ நிபுணர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள்,  பொறியாளர்கள்,  பெரும் பணக்காரர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள்  - அனைத்துத் தரப்பினரும்  உங்களிடமிருந்து தான் உருவாக வேண்டும்.

உங்களின் வளர்ச்சி எந்த அளவு முக்கியம்  என்பது இந்த சமுதாயம் அறியும். எஸ்.பி.எம். பரிட்சையில் உங்களது தேர்ச்சி உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல  எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியான தருணம் தான்.

உங்களது வெற்றி இந்த சமுதாயத்தின்  வெற்றி. முன்பெல்லாம் உயர்கல்வி என்பது  எட்டாக்கனி.  இன்றைய நிலை வேறு. அரசாங்கம் இல்லையென்றால்  தனியார் கல்வி நிலையங்கள் வாய்ப்புகளைக் கொடுக்கின்றன.  முன்பெல்லாம்  உயர்கல்வி என்றால் பொருளாதாரச் சிக்கல்.  இன்று கல்வி கடன்கள்  தாராளமாகக் கொடுக்கப்படுகின்றன. சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் கிடைக்கின்றது.

மாணவர்களே!  இப்போது உங்களுக்குப்  பொருளாதாரச் சிக்கல்கள் இல்லை. ஏதோ ஒரு வகையில்  சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன.  வாய்ப்புகள்  வழங்கப்படுகின்றன.  இது ஒரு பொற்காலம். அந்தப் பொற்காலத்தை, கற்காலமாக மாற்றிவிடாதீர்கள்.  உங்களின் வெற்றி இந்த சமுதாயத்தின் பொற்காலம்.

காலங்காலமாக  கண்ணீரும் கம்பலையுமாக வாழ்கின்ற சமுதாயம் இது. அதனை மாற்றியமைக்க வேண்டும். உங்கள் குடும்பம் மாறினால் இந்த சமுதாயம் மாறும். அதனை உங்களால் தான் மாற்றியமைக்க முடியும். உங்கள் குடும்பங்கள் உயர்ந்தால் இந்த சமுதாயமே உயரும்.

உங்கள் குடும்பங்கள் பல இன்னல்களுக்கிடையே  உங்களைப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். அது உங்களின் எதிர்காலம் சிறந்து விளங்க.  அவர்கள் பெருமைப்பட வேண்டும். அது மட்டும் அல்ல. இந்த சமுதாயமே பெருமைப்பட வேண்டும்.

உங்கள் குடும்பங்கள் பெருமைப்பட அத்தோடு இந்த சமுதாயம் பெருமைப்பட  நீங்கள் வெற்றிபெறுவது  முக்கியம்.

No comments:

Post a Comment