Monday 17 September 2018

வாழ்த்துகிறேன், நயன்..!


திரையுலகிளும் சில நல்லவர்கள் அவ்வப்போது தோன்றி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்! நடிகர் அஜீத்தைப் பற்றி பேசும்போது ஒவ்வொரு படத்திலும் தன்னோடு பணி புரிந்தவர்களுக்கு  - அதுவும் கீழ் மட்டம் வரை - அனைவருக்கும் உதவி செய்வார் என சொல்லுவதுண்டு. அவருடைய ஓட்டுனருக்கு உதவினார், தோட்டக்காரருக்கு உதவினார் என்றெல்லாம் செய்திகள் வருவதுண்டு. நகைச்சுவை நடிகர் விவேக்கும் அஜீத்தைப் பற்றி பெருமையாகவே பேசியிருக்கிறார். அதனால் அது உண்மையாகவே இருக்கும்.

இப்போது நடிகை நயன்தாராவை பற்றி சில நல்ல செய்திகளும் வருவதுண்டு. வேறு எந்த நடிகைகளுக்கும் இல்லாத பெருமை நயனுக்கு உண்டு.  அவருடைய நடிப்பைப் பற்றி நான் பேசவில்லை. அவர் நடித்த ஏதோ ஒரு படம் பார்த்ததாக ஞாபகம் உண்டு. நான் பேச வருவதெல்லாம் அவருடைய குணாதிசயங்கள் பற்றி. அவருடைய பெருந்தன்மையைப் பற்றி.

யோகி பாபு என்பவர் மிகச் சாதாரண நடிகர். சினிமாவில் ஓரிரு காட்சிகளில் வருபவர். எந்த சினிமா பின்னணியும் இல்லாதவர்.  அப்படி ஒன்றும் அழகு என்றும் சொல்லுவதற்கும் இல்லை. ஓர் முரட்டுத் தோற்றம். இவர் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் இப்போது அவர் பெரிய நகச்சுவை நடிகர் ஆகிவிட்டார்! நயன் தாரா மூலம் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புக்கள் வருகின்றன. அதனைத் தொடர்ந்து மற்ற இயக்குனர்களும் அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

ஏதோ ஒரு சராசரி மனிதர் தான் யோகி பாபு.  சினிமாவில் வளரத் துடித்துக் கொண்டிருப்பவர்.  ஆனால் அவர் உயரம் என்னவென்று அவருக்குத் தெரியும். மற்ற பிரபல நடிகர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் சினிமாவையே தனது பிழைப்பாக எடுத்துக் கொண்டவர். அவரிடம் திறமை உண்டு. உயர வேண்டும் என்னும் வெறி உண்டு. என்ன வாய்ப்புக்கள் கொடுத்தாலும் அதனைப் பிடித்துக் கொண்டு வளர வேண்டும் என்னும் கொள்கை உண்டு.

இந்த நேரத்தில் தான் நயன் அவருக்கு உதவினார். உதவி சரியான இடத்தில், சரியான நேரத்தில் வந்தது. நயனுக்கும் அவர் மேல் ஒரு அனுதாபம். அவரும் உதவினார். தொடர்ந்து அவரது படங்களில் வாய்ப்புக்கள் கொடுத்தார். 

இப்போது யோகி பாபு முதன்மையான நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார். அதனை அதிர்ஷ்டம் என்று சொல்லக் கூடாது. அது அவரது உழைப்புக்கான பலன். வெற்றி பெற வேண்டும் என்னும் அவரது வெறி. தங்களது இலட்சியங்களை நோக்கி உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது தான் உலக வழக்கு.

நயன்தாராவின் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்! ஓர் ஏழையை உயர்த்துவதற்கு நல்ல மனம் வேண்டும். அது அவரிடம் இருக்கிறது! வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment