Tuesday 14 May 2019

மெட்ரிகுலேஷன் கல்வி தொடர வேண்டுமா..?

அரசாங்க ஆலோகசர் டையிம் ஜைய்னுடின் நல்லதொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

ஆமாம்,  மெட்ரிகுலேஷன் கல்வி இனி தேவையற்ற உண்டு என்பதாக அவர் கூறிய  கருத்து  சரியானது தான். இல்லை என்று மறுக்க முடியாது. இதே கருத்தை கெராக்கான் கட்சியும் கூறியிருக்கிறது. 

ஆனால் கெராக்கான் தனது கருத்தை பாரிசான் ஆட்சி காலத்திலேயே கூறியிருந்தால் அவர்களைப் பாராட்டலாம். இப்போது அவர்களின் கருத்தை யாரும் கேட்கப் போவதில்லை! லட்சியம் செய்யப் போவதில்லை!   ஜைய்னுடின்  நிலைமை வேறு.  அவர் பக்காத்தான் அரசாங்கத்தை பிரதிநிதிப்பதால்  வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகி விடும். அம்னோவுக்கு இப்போது வேறு வேலை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுக்கத்  தயாராக இருக்கிறது!

இப்போது அம்னோவுக்குத் தெரிந்ததெல்லாம் "மலாய்க்காரர் உரிமை பறிபோயிற்று1 ஆட்சியாளர் உரிமை இழந்தனர்! இஸ்லாம் தகுதி இழந்தது!" என்னும்  பாணியிலேயே  அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் களம் இறங்குவர்! பாஸ் கட்சியும் அவர்களோடு ஒட்டிக் கொள்ளும்!  இன்றைய நிலையில் அவர்களுக்குக் கை கொடுப்பது மலாய்க்காரர் உரிமை, ஆட்சியாளர், இஸ்லாம் - இவைகள் தான் இனி அவர்களுடைய அரசியல்! 

நல்ல மாற்றங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அது மட்டும் உண்மை.

மெட் ரிகுலேஷன் கல்வி என்பது ஒரு காலத்தில் மலாய்க்கார மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. பல்கலைக்கழகத்தில் மலாய் மாணவர்களின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் குறிக்கோள்.  

இப்போது அதன் நோக்கம் நிறைவேறியாயிற்று என்பதில் ஐயமில்லை. இப்போது  படிக்கப்போகிற மாணவர்கள் பெரும்பாலும்ஆரம்ப கால மாணவர்களின்  பேரப் பிள்ளைகள்!    ஆரம்ப கால மாணவர்களிலிருந்து  இப்போது  போகும் அவர்களது  பேரப் பிள்ளைகள் வரை எந்த மாற்றமும்  மலாய்  மாணவர்களிடம்  ஏற்படவில்லை என்றால்  நமது கல்வி முறை குப்பைக் கூடையில் போட வேண்டிய கல்வி முறை என்பது தான் உண்மை!

நமக்குத் தெரிந்த வரை படிவம் ஆறு (எஸ்.டி.பி.எம்.) கல்வி முறைக்குத் தான் இனி அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.  அப்படி மெட்ரிகுலேஷன் கல்வி தேவை என்றே வைத்துக் கொள்ளுவோம். அப்படி என்றால் எஸ்.டி.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தில் இடம் ஒதுக்க வேண்டும்.  அது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

இந்த வழிமுறை ஒன்றே போதும்  படிவம் ஆறு மாணவர்களுக்குப் பலகலைக்கழகக் கல்வி   கட்டாயம் என்கிற  நிலை  இருந்தாலே போதும்  மெட்ரிகுலேஷன் கல்விக்காக யாரும் போராடப் போவதில்லை.

படிவம் ஆறு என்பது இன்னும் சிறப்பானது.   மற்ற பல்கலைக்கழகங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கல்விமுறை.  உலக அளவில்  அங்கீகரிக்கப்பட்டது.  இப்போதைய பிரச்சனை நமது  பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்! உலகமே ஏற்றுக் கொள்ளும் போது நம் நாடு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்....?   

படிவம் ஆறு கல்வி முறையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது ஒன்றே போதும். மெட்ரிகுலேஷன் கல்வி தேவையற்ற ஒன்று!

No comments:

Post a Comment