ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுமுன்..!
இது எங்களுக்கு ஏற்பட்ட புதிய அனுபவம். பகிர்ந்து கொள்வது எனது கடமை என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்களுடைய முப்பது ஆண்டு கால அனுபவத்தை தகர்த்து எறிந்து விட்டது இந்த அனுபவம்.
என் மகன் தனது கடையை வேறு ஒர் இடத்திற்கு மாற்றினான். அந்த கட்டடத்தின் உரிமையாளர் ஒருசீனர். அந்த உரிமையாளர் பெரிய மோசடி பேர்வழி என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
கடை ஒப்பந்தம் தானே தயாரித்துக் கொடுப்பதாகச் சொன்னார். வழக்கறிஞர் மூலம் போனால் வீண் செலவு என்று அவர் சொன்னார். முன்பே வாடகை பற்றியெல்லாம் பேசி விட்டோம். அவர் கையில் கடை சாவியையும் கொடுத்து விட்டார். நாங்கள் கடையில் உள்ளே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக கொடுக்க வேண்டிய முன் பணத்தையும் கொடுத்து விட்டோம். ஒரு சில வேலைகளையும் செய்து விட்டோம்.
ஆனாலும் ஒப்பந்தம் வந்தபாடில்லை! ஒப்பந்தம் கிடைத்த பிறகு மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்ளுவோம் என்று பொறுத்திருந்தோம். ஒரு மாதம் வரை இழுத்தடித்தார். நாங்கள் மற்ற வேலைகளையும் செய்வோம் என்று அவர் எதிர்பார்த்தார். நாங்கள் செய்யவில்லை.
கடைசியாக ஒப்பந்தத்தை கொண்டு வந்தார். ஒரே அதிர்ச்சி. நாங்கள் எதிர்பார்க்கவில்லை.ஒவ்வொரு வாக்கியமும் அவருக்குச் சாதகமாகவே இருந்தன. கடை எடுத்த எங்களுக்கு ஒன்று கூட சாதகமாக இல்லை. அதனால் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட முடியாது என்று சொல்லி விட்டோம்.
அவர் வருந்துவதாகத் தெரியவில்லை. காரணம் எங்களுடைய பணம் ஏழாயிரம் வெள்ளி அவரிடம் மாட்டிக்கொண்டது. பணத்தைக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்! இதே போல அவர் பலரை ஏமாற்றிய விஷயம் பிறகு தான் தெரியவந்தது!
இப்போது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. வீடு தெரியும். ஆளை பார்க்க முடியவில்லை! தலை மறைவாகி எத்தனை நாளைக்கு மற்றவர்களை ஏமாற்ற முடியும்?
ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முதலில் ஒப்பந்தத்தைப் படித்துவிட்டு பின்னர் பணம் மற்ற வேலைகளை ஆரம்பியுங்கள்.
இது போன்ற நபர்களுக்கெல்லாம் சாம, தான, பேத, தண்டம் தான் சரியோ!
No comments:
Post a Comment