Monday 29 November 2021

ஓமிக்ரோன் இன்னொரு மனிதகுல எதிரியா?

 

                                            கோரோனாவின் புதிய திரிபு ஓமிக்ரோன்

கோரோனாவின் புதிய  திரிபான ஓமிக்ரோன் இப்போது உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது!

அதன் மூலம் தென் ஆப்பிரிக்கா. இப்போது தனது பங்குக்கு ஒமிக்ரோனும் உலகில் எல்லா நாடுகளையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது!

இதற்கான மருந்துகள் இப்போது தீவிர ஆராய்ச்சியில் இருக்கின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரலாம்.

இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? இது பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும். உண்மையைச் சொன்னால் எல்லாமே வழக்கம் போல தான்!  வழக்கமான நடைமுறை! புதிதாக ஒன்றுமில்லை!

சமூக இடைவெளி தொடர வேண்டும்.  முகக்கவசம் அணிய வேண்டும். முடிந்த அளவில் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும்.  கொரோனாவிற்கான தடுப்பூசிகள் போட வேண்டும். இப்போதைக்கு இது தான் முக்கியம்.

இன்றைய நிலையில் தடுப்பூசிகளும் முகக்கவசமும் மிக மிக முக்கியமானவை. இன்னும் எத்தனை கொரோனா திரிபுகள் வந்தாலும் இவைகள் தான் முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு வேளை தடுப்பூசிகள் அதிகரிக்கப்படலாம். புதிய மருந்துகள் அறிமுகப்படுத்தப்படலாம். புதிய திரிபுகள் வரும்போது புதிய மருந்துகளும் வரலாம். இது ஒரு தொடர்கதை தான். முற்றுப்புள்ளிக்கு இடம் உண்டா என்பது இதுவரை தெரியவில்லை!

முன்பு போல  "லாக்டௌன்"  வருவதற்கு வாய்ப்புக் குறைவாகத்தான் இனி இருக்கும். அதனால் எல்லாருக்குமே பிரச்சனை. மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனை சமீபத்தில் கண்டோம். இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நாம் தான் எச்சரிகையாக இருக்க வேண்டும். நாம் வேலை செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்க முடியாது. வேலை செய்கின்ற இடத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். சில கட்டுப்பாடுகளோடு இயங்க வேண்டும். 

கோரோனா என்று வந்துவிட்டால் யார் தப்பிப்பார் யார் தவறுவார் என்று சொல்ல முடியாது! பணம் இருந்தால் தப்பித்துவிடலாம் என்று சொல்வதற்கில்லை. பல பணக்காரர்கள், பல பதவியில் உள்ளவர்கள் சமீப காலங்களில், எவ்வளவோ செலவு பண்ணியும், அவர்களால் தப்பிக்க முடியவில்லை!

யாராக இருந்தாலும் முகக்கவசம், தடுப்பூசி, பொது இடங்களைத் தவிர்த்தல், சமூக இடைவெளி அனைத்தும் கடைப்பிடிக்கபட வேண்டியவை. "நான் பணக்காரன்! நான் இதனையெல்லாம் செய்ய மாட்டேன்!" என்று இறுமாப்புடன் நடந்து கொண்டால்  அப்புறம் இறுதி ஊர்வலம் கூட இல்லாமல் போய்விடும்!

ஒமிக்ரோன் திரிபு மனிதகுலத்திற்கு எதிரியா என்றால் எல்லா திரிபுகளுமே  எதிரிகள் தான்! நாம் அவைகளுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்றால் நாம் நம் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும்! அவ்வளவு தான!

No comments:

Post a Comment