அடுத்த ஆண்டு படிவம் ஒன்று படிவம் நான்கு படிக்கப் போகும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் போதுமான அளவு இளநிலை அறிவியல் கல்லுரிகளுக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசா ராசையா இதனை அறிவித்திருக்கிறார். விண்ணப்பதிற்கான கடைசி நாள் நவம்பர் 5. தேதியும் முடிவடைந்தது.
பொதுவாக நாம் ஒன்றைக் கவனிக்கிறோம். அரசாங்கம் செய்கின்ற எதுவாக இருந்தாலும் அவர்களிடம் எப்போதுமே பொதுவான ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். "இந்தியர்களிடமிருந்து போதுமான விண்ணப்பங்கள் இல்லை!" என்கிற சுலபமான ஒரு பதில்.
இவர்கள் செய்கின்ற விளம்பரங்கள் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்குப் போய்ச் சேருகிறதா என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை! "நாங்கள் விளம்பரம் கொடுத்தோம் அத்தோடு எங்கள் பணி முடிவடைந்தது. விண்ணப்பம் செய்வது உங்கள் பிரச்சனை!" என்று அவரகள் நினைக்கிறார்கள்.
இங்குள்ள பிரச்சனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பூமிபுத்ரா மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பம் செய்கிறார்கள். அவர்களுடைய விண்ணப்பங்கள் நூறு விழுக்காடு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அந்த வாய்ப்பு அவர்களுக்கு நிரந்தரம்.
நமது மாணவர்களின் நிலை வேறு. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா, படாதா என்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பார்கள்! ஆமாம்! இல்லை! பதில் கிடைப்பதற்கே காத்துக்கிடக்க வேண்டும்! இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!
இது போன்ற இழுத்தடிப்புகளினாலேயே இந்திய மாணவர்களை மாரா கல்லூரிகள் ஈர்ப்பதில்லை. ஒரு பக்கம் இந்திய மாணவர்கள் மாரா கல்லுரிகளுக்குள் நுழையக் கூடாது என்று பேசும் ஒரு கூட்டம்! அவர்களே ஆசிரியர்களாக இருந்தால் மாணவர்களின் நிலை என்னாவது!
பொதுவாகவே மாரா கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அதுவும் அதிசயமில்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் நிலை தான் உள்ளது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரே வழி தான். அரசாங்கம், மலாய் ஆசிரியர்கள், அம்னோ - அனைவரும் உண்மையாக, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். வேறு வழியில்லை!
எல்லா இன மாணவர்களும் ஒன்று சேருவது அதுவும் கல்லூரிகளில் ஒன்று சேர்ந்து கல்வி பயில்வது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது. அதன் மூலம் தான் திறைமையான மாணவர்களை உருவாக்க முடியும்.
No comments:
Post a Comment