Tan Sri Michelle Yeoh wins best Actress Oscar!
Everything Everywhere All At Once என்கிற ஹாலிவூட் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதன் மூலம் மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ மிஷல் இயோ சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றிருக்கின்றார்! வாழ்த்துகள்!
இந்த ஆஸ்கார் விருது என்பது கடந்த 95 ஆண்டுகளில் முதன் முதலாக ஆசியாவைச் சேர்ந்த ஒரு நடிகைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது! ஆசியாவின் முதல் நடிகை அத்தோடு மலேசியாவின் முதல் நடிகை என்பதும் நமக்குப் பெருமையே!
மிஷல் இயோவுக்குத் தற்போது வயது 61 ஆகிறது. ஈப்போ, பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை வழக்கறிஞர். இயற்கை எய்தி விட்டார். தாயார் கோலாலம்பூரில் வசிக்கிறார் மிஷல் இப்போது சுவிட்சர்லாந்தில் வசித்துவருகிறார்
இப்படி ஓர் ஆஸ்கார் விருதை இனி வருங்காலங்களில் மலேசியா எதிர்பார்க்க முடியுமா என்பது நிச்சயமில்லை. ஒரு வேளை மிஷலே மீண்டும் ஆஸ்கார் விருதினை வெல்லலாம்! சாத்தியம் உண்டு.
இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். விருதினைப் பெற்ற பிறகு அவர் சொன்ன ஒரு வார்த்தை அனைவருக்குமே பொருந்தும்.
"இது ஓர் நம்பிக்கை ஒளி. எதுவும் முடியும் என்கிற சாத்தியங்கள் உண்டு. பெரிதாக எண்ணுங்கள். எண்ணங்கள் கைகூடும், சந்தேகமில்லை!" என்று உற்சாக வார்த்தைகளைச் சிறார்களுக்கு அள்ளித் தெளித்திருக்கிறார் மிஷல்! சந்தேகமில்லை. நம்பிக்கைக்குறிய வார்த்தைகள் தான்!
இதைத்தான் பாரதியும் சொன்னார்: "பெரிதினும் பெரிது கேள்!" நமது இலக்கு சிறிதாக இருந்தால் அது கிணற்றுத் தவளையாகவே இருக்கும்! உலகமே இலக்கு என்றால் அதுதான் சாதனை!
டான்ஸ்ரீ இயோவை வாழ்த்துகிறோம். இவருடைய சாதனைகள் மற்ற மலேசியர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என நம்புவோம். நாட்டுக்குப் பெருமை சேர்த்தவரை, தலைநிமிர வைத்தவரை மீண்டும் வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment