Wednesday 15 March 2023

உடை அணிவதில் ஒழுங்குமுறை வேண்டும்!

 

மலேசியர்கள் உடை அணிவது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது!

உடை அணிவதில் சில மாற்றங்கள் தேவை என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. 

ஆனால் ஒரு சந்தேகமும் எழுகிறது. அரசாங்க  அலுவலகங்கள்  என்னும் போது எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் இந்த தீடீர் நடைமுறை பேணப்படுமா அல்லது இங்கும் ஏதாவது விதிவிலக்குகள் உண்டா?

உடை நடைமுறை என்பது நீண்ட காலமாக  புழக்கத்தில் இருக்கின்ற ஒரு நடைமுறை தான். அது ஒன்றும் புதிதல்ல. இத்தனை ஆண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  இப்போது அதனை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்,  அமல் படுத்த நினைப்பது எதனால் என்று புரியவில்லை. 

இதிலும் ஏதும் அரசியல் உண்டா என்பது புரியவில்லை. தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. இலஞ்சம் வாங்கலாம்! விருப்பத்திற்கு நடந்து கொள்ளலாம்!  ஆனால் இப்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில்  கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ள வேண்டியுள்ளது என்று அரசாங்க ஊழியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இந்த கெடுபிடிகள் என நினைக்க வேண்டியுள்ளது. வரவேற்கிறேன்! ஆனால் இந்த கெடுபிடி எப்போது இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்போதிருந்தே இது நடப்பில் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இப்போது பொது மக்கள் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கி இருக்க மாட்டார்கள்.  ஆனால் நமது அரசாங்க ஊழியர்களுக்கு அலட்சியம் அதிகம்.  பணத்தைப் பார்த்தால் நடைமுறைகளைத் தளர்த்திக் கொள்வார்கள்!  அது தான் பிரச்சனை!

இப்போது அரசாங்க அலுவலுகங்கள் தாங்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். ஒளிவு மறைவு தேவை இல்லை. எது சரி, எது தவறு - அவ்வளவு தான்! முறையாகச் சொல்லிவிட்டால் மக்கள் அதனை மதிப்பார்கள். இப்போது நடப்பதெல்லாம் அவரவர் விருப்பத்திற்கு  ஏற்ப நடந்து கொள்கிறார்கள் என்பது தான் குற்றச்சாட்டு.

இப்போது நாம் சொல்ல வருவதெல்லாம் நமது அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். என்றால் மக்களுக்கு அந்த செய்திகள் போய்  சேர வேண்டும். மக்கள் புரிந்து கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு அதனை ஏதோ ஒரு பெரிய காரியத்தைச் சாதித்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது! அப்படியென்றால் இங்கும் ஏதோ ஓர் அரசியல் ஒளிந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது!

உடை அணிவதில் ஓரு நாகரிகம் வேண்டும்! அனைத்து மலேசியரும் அதனை விரும்பத்தான் செய்வார்கள்! 

No comments:

Post a Comment