Tuesday 10 October 2023

மேல் முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது!

 

நவீன் கொலை வழக்குப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். அந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்தும்  அதன் பின்னர் நம் சமூகத்தில் ஏற்பட்ட  கொந்தளிப்பும்  நாம் அறிந்தது தான்.

இதில் கொடுமை என்னவெனில் அந்த ஐந்து பேரும் விடுதலை செய்யும்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ' குற்றம்  செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால்'   அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட நவீன் குடும்பத்தினர் சார்பில்  வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் போதுமான ஆதாரங்களைக் கொண்டிராததால் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதுவும் ஆறு ஆண்டுகள்  எந்த ஒரு சலனமும் இல்லாமல் வழக்கை ஆறப்போட்டு தீடீரென  ஒரு நாள்  ஆதாரம் இல்லை என்று சொல்லி வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்!

அதுவே ஒரு பெரும் அதிர்ச்சி!  அத்தோடு நீதி அஸ்தமித்துவிட்டதாக  நாம் நினைத்தோம்.   ஆனாலும்  இப்போது  நடந்திருப்பது  நீதியின்  மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

என்ன தான் குறுக்கு வழிகளில்  வெற்றி பெறலாம் என்று நினைத்தாலும்  நேர்மையான் வழிகள் தான் வெற்றி பெறும்.  அதைத்தான் இந்த மேல் முறையீடு நமக்கு மெய்ப்பிக்கிறது.

ஆனாலும் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன என்று சொல்லுவதற்கில்லை. இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம். இப்போதும் அது ஒரு எளிதான வழியாக இருக்கப் போவதில்லை.    போதுமான ஆதாரங்கள்  இன்றி ஏந்த வழக்கும் நிற்கப்போவதில்லை. சும்மா ஆரவாரமாகவும், கத்திக்கூச்சல் போடுவதாலும்  ஒன்றும் ஆகப்போவதில்லை! நீதிமன்றத்திற்கு ஆதாரம் தேவை.

சமீபமாக நமது இளைஞர்கள் செய்கின்ற அட்டகாசங்களை நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை  என்பது உண்மை தான். நமக்கு அனைத்து மக்களின் ஆதரவு தேவை. இந்த ஒரு விஷயத்திலாவது ஒற்றுமையைக் காட்டுங்கள். ஆனால் ஒற்றுமையைக் காட்டியிருக்கிறார்கள்.  இல்லை என்று சொல்ல முடியாது.

தொடர்ந்து எல்லாம் சுமுகமாக நடைபெற வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பது நிச்சயம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

மேல்முறையீடு தற்காலிக வெற்றி தான்.  அது நிரந்தர வெற்றியாகும் என் நம்புவோம்.
 

No comments:

Post a Comment