Wednesday 17 April 2019

நடவடிக்கை தேவை...!

கடந்த கால ஆட்சியில் நமது இந்திய சமுதாயத்தை "தூக்கோ தூக்கு" ஏன்று தூக்கிவிடும் ஏன்பதாகக் கூறப்பட்ட பிரதமர் துறையின் செடிக் அமைப்புப் பற்றி மீண்டும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன!

ஆனால் ஏற்கனவே நமக்குப் பல செய்திகள் கிடைத்து விட்டன. துல்லியமாக இல்லை என்றாலும் பெரும்பாலான திருடர்களை அடையாளங் கண்டிருக்கிறோம்! இன்னும் இன்னும் என்று காலம் கடத்திக் கொண்டு போவதைவிட அவர்கள் மேல் சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் மலேசியர் இந்தியர்களின் ஆவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

பெரும்பாலான பணம் இயக்கங்களுக்குத் தான் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இப்போதும் அது தான் நடந்திருக்கிறது.  அதாவது இயக்கங்களுக்குக் கொடுத்தால் இந்தியர்களுக்குக் கொடுத்த மாதிரி! இயக்கங்களைத்தான் இந்தியர்கள் என்பதாக ஒரு கருத்து செடிக் அல்லது மித்ரா இரண்டுக்குமே உண்டு!

செடிக் ஒரு படி மேல். இயக்கங்கள் சொத்துக்கள் வாங்கியிருக்கின்றன. ஆனால் அந்த சொத்துக்கள்  இயக்கத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நமக்கு ஒன்றும் இது அதிர்ச்சி அளிக்கவில்லை!  காரணம் இதற்கு முன்பும் இந்தியர்களின் சொத்துக்கள் தலைவர்களின் சொத்துக்களாக மாறி இருக்கின்றன! நாம் அதற்கெல்லாம் பழகி விட்டோம்./

ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை.  இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட செடிக் அமைப்பிலிருந்து பிரதமர் துறையின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களுக்கு சுமார் இருநூறு கோடி வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது!  இந்தியர்களுக்கு என்று கூறப்படுவதால் பிரதமர் துறையின் கீழ் உள்ள அந்த மூன்று இந்திய நிறுவனங்கள் யாவை என்பதைத் தெரிந்து7கொள்ள நமக்கும் ஆவல் இருக்கத்தானே செய்யும்!

இதில் இன்னொரு கேவலம்!   இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கியவர்கள் தங்களது உண்மையான முகவரிகளைக் கொடுக்கவில்லையாம்!  ஆக, ஏமாற்றுவது தான் அவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது!

ஒன்று புரிகிறது.  முகவரிகளைக் கொடுக்காமல் ஏமாற்றியவர்கள் கடைசியில் முகவரி இல்லாமல் சாவார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்!

இனி நமக்கு இவர்களைப் பற்றிய செய்திகள் வேண்டாம்! தேவை இவர்கள் மீதான நடவடிக்கை!

No comments:

Post a Comment