Monday 25 October 2021

அரசாங்கத்தால் முடியாது!

  ஏர் இந்தியா விமானம்  பற்றி  சமீபகாலமாக நிறைய செய்திகள்!

படித்தும் ஓய்ந்துவிட்டோம்! என்ன தான் ஓய்ந்து உலர்ந்து போனாலும் ஒரு செய்தி நம்மை உரக்க உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்று மனதில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஏர் இந்தியா விமானம் ஓர் தனியார் நிறுவனமாக டாட்டா குழுமத்தினாரால் 1932-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1953-ம் ஆண்டு தேசிய மயமாக்கல் சட்டத்தின்  கீழ் ஏர் இந்தியா அரசாங்க உடமையாகியது. இப்போது 2021 ஆண்டில் சுமார் 68 ஆண்டுகளுக்குப் பின்னர்  அரசாங்கத்தின் உடமையான ஏர் இந்தியா மீண்டும் டாட்டா குழுமத்திற்கே திரும்பிவிட்டது! அரசாங்கத்தால் நடத்த முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டது!  இது தான் ஏர் இந்தியாவின் வரலாற்றுச் சுருக்கும்!

இதிலிருந்து நமக்குள்ள பாடம் தான் என்ன? ஒரு தனியார் நிறுவனத்தை அரசாங்கத்தால் நடத்த முடியாது என்பது தான் முதல் பாடம். நிச்சயமாக முடியாது!

ஏர் இந்தியாவை ஆரம்பித்த போது அதன் நிறுவனர் ஜே.ஆர்.டி.டாட்டா முதல் வேலையாக  பயிற்சி பெற்ற  வணிக விமான ஓட்டி உரிமம் பெற  அதற்கான பயிற்சிகளைப் பெற்றார்.  விமானத்தின் முதல் பயணம் கராச்சி- பம்பாய். அவ்விமானத்தை ஓட்டியவர் சாட்சாத் ஜே.ஆர்.டி. டாட்டா அவர்களே தான்!

இது முக்கியம். காரணம் முதலீடு செய்தவனுக்குத் தான் அதன் வலி தெரியும். விழுந்தால் மரண அடி! அதனால் எல்லாமே "காசு பணம் துட்டு மணி!"  ஒவ்வொரு காசும் கணக்குப் பண்ண வேண்டி இருக்கும்!

அதையே அரசாங்கம் எடுத்தால் என்ன ஆகும்? விமானத்தைப் பற்றி தெரியாதவன், பணத்தின் அருமை தெரியாத எருமை!  இவர்கள் எல்லாம் உலகத்தையே சுற்றி வரும் விமானத்தை நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தால் இது தான் ஆகும்! ஆமாம்! 30,000 - 40,000 கோடி கடனில் தான் முடியும்!

நம் நாட்டிலேயே இதைப் பார்க்கிறோமே. நமது தேசிய விமானத்தை கரை சேர்க்க முடியவில்லையே! அரசாங்கம் பொறுப்பேற்றால் அது அப்படித்தான் இருக்கும்! காரணம் அவன் பணம் போடவில்லையே! பணம் போட்டால் தானே வலி, வேதனைத் தெரியும்!

அரசாங்கம் எதனை ஏற்று நடத்தினாலும் பணம் கொள்ளை போகுமே தவிர வெற்றி பெற முடியாது! ஏதோ ஒரு சிலருக்கு வேலை கிடைக்குமே தவிர இலாபம் கிடைக்காது! அரசாங்க ஊழியனும் அதைத்தான் விரும்புகிறான்!

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன? அரசாங்கத்தால் எந்த ஒரு நிறுவனத்தையும் நடத்த முடியாது என்பது தான்!

No comments:

Post a Comment