Wednesday 27 October 2021

இது சரியான நடவடிக்கை தானா?

 

                                                            மித்ரா நிதி முறைகேடு!

இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மித்ரா (முன்பு செடிக்) பற்றியான செய்திகள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளில்  வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன!

நமக்குக் கிடைக்கும் செய்திகள் என்பது பத்திரிக்கைகளில்  வருகின்ற செய்திகள் மட்டும் தான். உள்ளே என்ன நடக்கின்றது என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நமக்குத் தெரிந்தது எல்லாம் அரசியல்வாதிகள் அல்லது பெரிய நிறுவனங்கள் மித்ரா நிதிகளை முழுமையாக சுருட்டி விடுகின்றனர். அதனால் கீழ் மட்டத்திலுள்ள சிறு நிறுவனங்களுக்கு எந்த நிதி உதவியும் போய்ச் சேருவதில்லை என்பது மட்டும் தான்.

இது இப்போது தான் நடக்கிறதா என்றால் இல்லை! செடிக் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே இது நடந்துகொண்டு தான் வருகிறது! ஆனால் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் செடிக் இருந்ததால் பொது மக்கள் வாய் திறப்பதில்லை!

ஆனால் இப்போது நாம் பார்ப்பது என்பது நம்மால் நம்ப முடியாத செய்தி. திடீரென கைது நடவடிக்கை! அதுவும் நேரம் காலம் இல்லாமல் நடவடிக்கை! ஏதோ கொலை குற்றவாளிகள் போல் நடவடிக்கை.  இதுவரை சுமார் 17 நிறுவனங்களில் இயக்குனர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது நடவடிக்கையை நாம் குறை சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு நடவடிக்கையை நாம் எதிர்பார்க்கவில்லை. ஏதோ தேர்தல் கால நடவடிக்கை போல் இருக்கிறது!உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்!  இந்த நடவடிக்கையை நாம் ஆதரிக்கிறோம். அவ்வளவு தான்.

அரசாங்கம் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக ஆண்டு தோரும் 10 கோடி வெள்ளி  கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த பணம் இந்திய சமுதாயத்தின் கீழ் தட்டு மக்களுக்கோ அல்லது சிறு வியாபாரிகளுக்கோ போய்ச் சேருவதில்லை என்பது தான் நீண்ட கால குற்றச்சாட்டு. யாரிடம் போய் சேருகிறது என்பதிலும் தெளிவில்லை.

இப்போது நடைபெறுகின்ற கைது நடவடிக்கைகளைப் பார்க்கின்ற போது இது மேல்தட்டு வணிகர்களுக்குத் தான் போய் சேருகிறது என்பதைப் பார்க்க முடிகிறது! ஆமாம் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பெரிய வணிக நிறுவனங்களின் இயக்குநர்கள்.  நாம் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். உண்மை நிலவரம் தெரியவில்லை.

இந்த கைது நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஒரு முற்றுப்புள்ளி வைத்துத்தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் ஒரு சந்தேகம் வருவதற்கும் சாத்தியம் உண்டு. நிறுவனங்களின் இயக்குநர்கள் என்றால் அரசியல் பின்னணி இருக்காமல் இருக்க முடியாது! அப்படி ஒரு பின்னணி இருந்தால் அவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை பெற்றுவிட முடியும்!

பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment