இந்தியர்களுக்கான வியூகப் பெருந்திட்டம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் ம.இ.கா.வால் உருவாக்கப்பட்ட ஒரு பிரமாண்ட திட்டம்.
அது ம.இ.கா.வால் உருவாக்கப்பட்டது என்பதற்காக அதனை நாம் புறந்தள்ளிவிட முடியாது. பல ஆய்வுகளுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டு அன்றைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அது பற்றி நாம் சந்தேகப்படவோ குறை சொல்லவோ ஒன்றுமில்லை. இந்தத் திட்டம் இன்றைய சூழலுக்கு ஏற்றதாக இருக்குமா என்றெல்லாம் காவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லாக் காலங்களிலும் இந்தியர் பிரச்சனை என்பது பெரியளவில் மாற்றம் இல்லாதது! மீண்டும் மீண்டும் அதே பிரச்சனை! காரணம் ஆரம்பமுதலே இந்தியர் பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.இ.கா. வும் மறந்து போனது! இந்தியர்களின் வாக்கு இவர்களுக்குத் தேவையில்லை என்பது போலவே நடந்து கொண்டனர். பதினான்காவது பொதுத் தேர்தல் இவர்களுக்குக் கொஞ்சம் பொதுப்புத்தியைக் கொடுத்திருக்கும் என நம்பலாம்.
இன்றைய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி ம.இ.கா.வால் உருவாக்கப்பட்ட இந்த வியூகப் பெருந்திட்டத்தை 12-வது மலேசிய திட்டத்திற்காக கையில் எடுத்திருப்பது பாராட்டுதல்களுக்கு உரியது. ஆனால் அவர் அந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்வாரானால் அதோடு அந்தத் திட்டத்தை மறந்து விடலாம்!
ஆய்வு என்று பிரதமர் சொன்னாரானால் இவருடைய ஆட்சி முடிந்த பின்னர் தான் அது பற்றி பேசுவார்கள்! அதனால் ஆய்வு என்கிற பேச்சுக்கு இடமில்லை/ மனது வைத்தால் செய்ய முடியும், அவ்வளவு தான்!
நம்மிடம் ஒரு கேள்வி உண்டு. அது எப்படி பூமிபுத்ரா என்னும் போது எல்லா தரவுகளுமே விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். இந்தியர் என்றால் அரசியல்வாதிகளுக்கு எதுவுமே ஞாபகத்திற்கு வருவதில்லை? இந்தியர்கள் என்ன சொர்க்கத்திலா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?
அப்படி என்ன தான் இந்த வியூகப் பெருந்திட்டத்தில் பயப்படும்படியாக இருக்கப் போகிறது? கல்வி: உயர் கல்விக் கூடங்களில் போதுமான இடம். அரசாங்க வேலைகளில் நமது விகிதாச்சாரப்படி போதுமான வேலை வாய்ப்புக்கள். தொழில் செய்ய மித்ராவின் மூலம் போதுமான பொருளாதார உதவி. மிக முக்கிய அமசம் இவைகளாகத்தான் இருக்க வேண்டும்.
இங்கு நாங்கள் எங்கள் உரிமைகளைத்தான் கேட்கிறோம். அதுவும் மறுக்கப்படுகிறது என்றால் நாங்கள் ஏன் இந்த அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும்? உண்மையைச் சொன்னால் நாம் தேர்தலையே புறக்கணிக்க வேண்டும்.
ஆய்வு என்று சொன்னால் அது கடைசியில் "ஆயி" தான்!
No comments:
Post a Comment