இந்த தடை உத்தரவு நாளை (25.10.2021) தொடங்கி நவம்பர் 27-ம் தேதி வரை நீடிக்கும் என்கிறார் சுகாதார அமைச்சர்.
இப்போது இது பற்றியான விவாதங்கள் சூடுப்பிடிக்கத் தொடங்கி இருக்கின்றன! இது அரசியல். இப்படியும் அப்படியும் பேசுவார்கள். எது நடந்தாலும் அவதிப்படுகிறவர்கள் பொதுமக்கள் தான்.
இங்கு நாம் அரசியல் பேசுவதாக இல்லை. சுகாதாரம் தான் முக்கியத் தேவை. ஏற்கனவே சபாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். அது இந்த நாட்டுக்கு ஏற்பட்ட பீடை என்று சொல்லலாம். அப்போது ஏற்பட்ட அந்த பீடை இது நாள்வரையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!
சுகாதார அமைச்சர் சொல்லுவதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தல் என்று சொல்லி மாநிலத்தை மட்டும் தான் குட்டிசுவர் ஆக்குவார்கள் என்று சொல்ல முடியாது. அரசியல்வாதிகளைப் பற்றி நமக்குத் தெரியும். பொறுப்பற்றவர்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
மற்றவர்களுக்கெல்லாம் புத்தி சொல்லுவார்கள். அவர்கள் எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றுவதில்லை! அதனை நாம் கண்கூடாகப் பார்த்தோம். முகக்கவசம் போடாமல் வெளியே சுற்றுவது, உணவகங்களுக்குப் போவது - இது தான் அரசியல்வாதிகளுக்கு உள்ள பழக்கவழக்கங்கள்! தங்களுடைய அத்துமீறல்களுக்காக அரசாங்கத்தில் அதற்கான தண்டனையும் பெற்றவர்கள்!
நாம் வாய் மூடி பேசாமல் இருந்தால் அவர்கள் அஞ்சடித்தனமாக நடந்து கொள்வார்கள் என்று சமீபகாலங்கலில் நாம் கண்முன் கண்ட நிகழ்வுகளே போதுமானது!
சுகாதார அமைச்சர் "தடை" என்று சொன்னதை நாம் ஆதரிக்கிறோம். கூட்டங்கள் கூடும்போது யாரும் இடைவெளியைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்! மலேசியர்களின் பரம்பரைக் குணமே அப்படித்தான்! சிறிய அறைகளிலே நடைபெறும் "செராமா" என்று சொன்னாலும் அங்கும் மட்டும் என்ன வாழப்போகிறது? தனித் தனியே சந்திப்போம் என்று சொன்னாலும் வாக்குக் கேட்பவர் ஒரு பெரிய கூட்டத்தையே தன் பின்னால் கூட்டிச்செல்வார் என்பது நமக்குத் தெரியாதா!
யார் வேண்டுமானாலும் திருந்துவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் திருந்த வாய்ப்பில்லை! கோவிட்-19 அதிகரிக்கும் போது அதனையே அரசியலாக்கி தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள்!
தேர்தல் பிரச்சாரங்களுக்குத் தடை வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு!
No comments:
Post a Comment