Wednesday 20 October 2021

கடவுளின் தேசம்!

 

                                        வெள்ளத்தில் சாய்ந்து விழும் இரண்டு மாடி வீடு

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் கேரள மாநிலம் இப்போது என்ன ஆயிற்று என்று கேட்கத் தோன்றுகிறது. கடவுளின் கோபத்திற்கு ஆளாகியிருக்குமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.

மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் ஆன சேதம் கொஞ்ச நஞ்சமல்ல. பொருள்களை மீட்டு விடலாம். ஆனால் போன உயிர்கள்...? யார் என்ன செய்ய முடியும்? போனது போனது தான்!

கேரளா மாநிலத்தைப் பற்றி நான் அதிகம் அறியாதவன். ஆனால் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம் என்னால் மறக்க முடியாத மாவட்டம். அந்த மாவட்டத்தின் பெயர் 'பத்னமத்திட்டா" என்னும் பெயர் கொண்டது.

நான் முன்பு வேலை செய்த தோட்டமொன்றில்  தலைமை அலுவலராக பணிபுரிந்தவர் அந்த பத்னமத்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் கடிதம் எழுதும் போதெல்லாம் அந்த மாவட்டத்தின் பெயர் வரும். அந்த பெயர் ஏனோ என் மனதில் அப்படியே பதிந்துவிட்டது! அதனால் கேரளா என்றால் வேறு எதையும்விட பத்னமத்திட்டா இயல்பாகவே வந்துவிடும். உடனே அவர் ஞாபகம் அவரது குடும்பத்தினரின்  ஞாபகம் எல்லாம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்! பாவம்! அவரது குடும்பம் என்ன ஆகியிருக்குமோ என்றெல்லாம் மனதில் ஓடும்!

இந்த கடவுளின் தேசத்திற்கு இதற்கு முன்பு இப்படி ஒர் சேதம் ஏற்பட்டிருக்குமா என்பது  தெரியவில்லை. இந்த முறை ஏற்பட்டிருப்பது மிகவும் கடுமையான சேதம்.

2018-ம் ஏற்பட்ட சேதம் இதைவிட அதிகம் என்கிறார்கள். ஆனால் இப்போது இன்னும் மழை நீடிக்கிறது. மழை நின்றபாடில்லை. பாலங்கள் பல காணாமல் போய்விட்டன. தடுப்பணைகள் போன இடம் தெரியவில்லை. பல குடும்பங்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை. பலர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். யாராலும் எதுவும் செய்ய முடியாத ஒரு சூழல். இயற்கையின் கோபம் தணிந்தால் அன்றி மனிதனால் எதுவும் செய்ய இயலாது.

ஒரு சில தினங்களுக்கு முன் மகிழ்ச்சியாக ஓடி ஆடி திரிந்த சின்னஞ்சிறுசுகள் இன்று இல்லை. சோகத்தின் விளிம்பில் மக்கள்.

முன்னேற்றம் என்கிற பெயரில் இயற்கையை அழித்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம். கேரளாவிற்கு மட்டும் அல்ல உலகிற்கே இது பாடம். ஆனால் இதனாலெல்லாம் மனிதன் திருந்திவிடுவானா என்றால்,  இல்லை, திருந்தமாட்டான்! அவனின் படைப்பு அப்படி!

அந்த மாநில மக்களுக்காக நாம் பிரார்த்திப்போம்! அது தான் நம்மால் முடிந்தது!

No comments:

Post a Comment