Thursday 21 October 2021

இது அயோத்திதாசரின் மண்!



                                                அயோத்திதாசர் -  1845 - 1914 (68 வயது)

சமீபத்தில் நமது மலேசிய மண்ணில் பெரியாரின் 143-வது பிறந்த நாளை பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினரால் அதுவும் இளைஞர்களால் விமர்சையாகக் கொண்டாப்பட்டதாக செய்திகளைப் படித்தோம்.

பெரியாரைப் பற்றி நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரது சேவையை அறியாதார் யாருமில்லை.  அவரது சேவையை நாம் மதிக்கிறோம்.

தொடர்ந்தாற் போல அவரது திராவிட கட்சியினர் தான் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர்.  அவரது கட்சியினரே சாதிமத ஏற்றத் தாழ்வுகளை வளர்க்கின்றனரே தவிர ஒழித்ததாகத் தெரியவில்லை! ஒழிப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை! எல்லாம் பேச்சோடு சரி!

ஆனால் அவரைப் பெரிய சாதனையாளராக திராவிடக் கட்சிகள் தொடர்ந்து செய்திகளைக் கொடுத்து வருகின்றன. அவரது கொள்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை! ஆனாலும் பெரியார், பெரியார் என்று நாள் தவறாமல் அவரது பெயரை ஓதி ஓதி ஒழுகுகின்றனர்! அங்கேயே அப்படி என்றால் இங்கே எப்படி!

ஒரு தமிழரான பண்டிதர் அயோத்திதாசர் தமிழ் நாடு, நீலகிரி மாவட்டத்தில் பிறந்தவர்.  தமிழ் நாட்டின்  முதல் சாதி எதிர்ப்புப் போராளி. தமிழ் நாட்டின் முதல் குரல் அவரது குரல். ஆனால் பின் வந்தவர்களால் அவரது சேவைகள் முழுமையாக மறைக்கப்பட்டன. தமிழன் என்றாலே அவனது சேவைகள் மறைக்கப்படும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு  வருகிறோம்!

பண்டிதர் அயோத்திதாசரைப் பற்றி தெரிந்து கொள்ள விக்கிபிடியாவைத் தான் நாம் நாட வேண்டியுள்ளது. அவர் சமூக சேவையில் நாட்டமுள்ளவர். தமிழறிஞர். தமிழன் இதழை நடத்தியவர் என்று அவரைபற்றியான பல குறிப்புகள் காணப்படுகின்றன.

இன்றைய இளைஞர்கள் முடிந்தவரை தமிழர்களுக்காகப் போராடிய தமிழர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதுமட்டும் அல்ல. நம் நாட்டில் உள்ள எந்தவொரு இயக்கத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது கோவில் தலைவர்கள் போன்றவர்கள் கூட தமிழர்களாக இருக்க முடியவில்லை. உங்களைச் சுற்றிப் பாருங்கள்.  தமிழர் அல்லாதார் தான் தமிழர்களுக்குத் தலைமை தாங்குகின்றனர்! இதே போன்ற இழிவுகளை நாம் தொடர்ந்து அனுபவித்து வருகிறோம்.

இளைஞர்களே! தமிழர்களை அடையாளங் காணுங்கள். அவர்களுக்கு உங்களின் ஆதரவுக் கரத்தை நீட்டுங்கள்.

இது பெரியார் மண் என்று சொல்லுவதைவிட பண்டிதர் அயோத்திதாசர் மண் என்று  சொல்லுங்கள். எல்லாக் காலங்களிலும் நம் இனத்தைப் பாராட்டுவதைவிட பிற இனத்தாரைப் பாராட்டுவதிலேயே காலத்தைக் கழித்துவிட்டோம்.

இனி நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்!

No comments:

Post a Comment