Tuesday 26 October 2021

இந்தியா முன்னேறுகிறது!

 

                                                            இந்தியா முன்னேறுகிறது!

இந்திய பிரதமர் நரேந்திர மேடி ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் சொல்லுகின்ற வார்த்தை: "இந்தியா புது உத்வேகத்துடன் முன்னேறுகிறது!" 

நமக்கும் அதில் மகிழ்ச்சி தான்.  இந்தியா முன்னேறக் கூடாது என்று எந்த வெளிநாட்டு  இந்தியனும் விரும்ப மாட்டான்.  இந்தியா முன்னேறுவது அவனுக்கும் பெருமை தரும் விஷயம் தான்.

நமது சீன சகோதரர்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.  சீனாவின் முன்னேற்றம் அவர்களுக்குப் பெருமை தருகின்ற விஷயம் தானே! பொருளாதாரத்தை வைத்து இன்று பல நாடுகளைத் தங்களது கைக்குள் கொண்டு வந்து விட்டார்களே!

இந்தியாவின் படுவேக வளர்ச்சி என்பதை பிரதமர் மோடி எந்த கோணத்தில் பார்க்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை. 

பிரதமர் மோடி குஜாராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் மிகப் பெரிய கோடிசுவரர்களாக நாடெங்கிலும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம் மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக உருவாக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டும் உண்டு. அவர் பெரும்பாலும் மேல் தட்டு மக்களுடனேயே தனது உறவுகளை வைத்துக் கொள்வதால் "இந்தியா முன்னேறுகிறது!" என்று அவருக்குச் சொல்லத் தோன்றுகிறதோ என்று நாம் நினைக்கத் தோன்றுகிறது!

சமீபத்திய ஒரு புள்ளிவிபரம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கிறது. அவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்து இந்த புள்ளிவிபரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகளின் எடை, குழந்தைகளின் ஊட்டச்சத்து, குழந்தைகளின் உடல் வளர்ச்சி, குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இதனை வைத்து பட்டினி பட்டியலில் இந்தியா  மொத்தம் 116 நாடுகளில் 101 வது இடத்தில் இருப்பதாக அந்த புள்ளிவிபரம் கூறுகிறது. அதாவது எத்தியோபியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேப்பாளம் போன்ற நாடுகளைவிட இந்தியாவின் நிலைமை மிக மோசம் என்பது தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது!

அதுவும் இந்தியா அதிகக் கோடிசுவரர்களைக் கொண்ட நாடு. சுமார் 81 கோடிசுவரகள் நாட்டில் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி அரசு கோடிசுவரர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுகிறதோ என்று தான் சொல்லத் தோன்றுகிறது! நாட்டு வளத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால் அந்த வளம் பணக்காரர்களை மட்டும் குறி வைக்கிறதோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது!

கோடிசுவரர்கள் முன்னேறக் கூடாது என்பதல்ல குடிசையில் வாழ்பவனும் முன்னேற வேண்டும்  என்பது தான் நமது விருப்பம்! நடக்கும்! நம்புவோம்!

No comments:

Post a Comment