Friday 29 October 2021

என்ன சத்தம் இந்த நேரம்!

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ் மீது வழக்கு ஒன்றைப்  பதிவு செய்திருக்கிறார்!

டோமி தாமஸ் அவர்  எழுதிய "My Story: Justice in the Wilderness" புத்தகத்தில் தன்னைப் பற்றி தரக்குறைவாகவும் அவதூறாகவும் எழுதியிருப்பதாக கூறி டோமி மீது அவதூறு வழக்கை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அத்தோடு அவருடைய புத்தகத்தை பிரசுரம் செய்த அந்த நிறுவனத்தின் மீதும் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்.

நஜிப் வழக்குப் போடுவது என்பது ஒன்று புதிதல்ல. தன்னைப் புனிதன் என்று காட்டிக் கொள்ள இந்த வழக்குகள் அவருக்குத் தேவையாய் இருக்கின்றன! அரசியலில் இதெல்லாம் சர்வசாதாரணம்.

ஆனால் இந்த வழக்கை இந்த நேரத்தில் தொடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் முன்பே சொன்னது போல அவர் தன்னைக் குற்றமற்றவன் என்று காட்டிக் கொள்ள விரும்புகிறார்! அதனை அடுத்த பொதுத் தேர்தலின் போது அப்படிக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. அது மக்களைக் குழப்புவது தவிர வேறொன்றுமில்லை!

ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் மலாக்கா மாநிலத் தேர்தல் வந்துவிட்டது. இன்னொரு எதிர்பாராத நிகழ்வு என்றால் மாநிலத் தேர்தலுக்கு அம்னோ கட்சியின் சார்பாக அவரே - நஜிப் அப்துல் ரசாக் - தலைமை ஏற்கிறார்.

இது அவருக்கு எதிர்பாராத அமைந்த ஒரு வாய்ப்பு.  இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சனை! மலாக்கா மாநிலத்தில் அம்னோ வெற்றி பெற்றால் நஜிபின் அரசியல் எதிர்காலம் கொடி கட்டிப்பறக்கும்! அப்படியே தோல்வியுற்றால்  அரசியலில் அது அவருக்கு இறுதிக் காலம்!

இப்போது இப்படி ஒரு வழக்கை டோமி மீது பதிவு செய்வதன் மூலம் தன்னை நிரபராதி என்று காட்டிக் கொள்ள அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது! இது தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்குக் கை கொடுக்கும் என அவர் நினைக்கிறார்! அம்னோ கட்சியினருக்கு இருக்கும் வாய்ப்பும் வசதிகளையும் வைத்துப் பார்க்கும் போது  இந்த வழக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பது அவர் கணிப்பு! யார் கண்டார்? அப்படியும் ஒரு விபத்து நடக்கலாம் அல்லவா!

நினைப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும் என்பார்கள்  ஆனால் நஜிப் விஷயத்தில் அது பொழப்பைக் கெடுக்குமா அல்லது பொழைப்பை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! எல்லாம் வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்தது!

வருகின்ற மலாக்கா தேர்தலில் நஜிப்பின் சத்தம் கொஞ்சம் கூடுதலாகவே கேட்கும் என நம்பலாம்!

No comments:

Post a Comment