Thursday 28 October 2021

அரசாங்க ஊழியர்களுக்கு நினைவுறுத்து!

       முதல் சைனோவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர்

அரசு ஊழியர்களுக்கு  மிகவும் பணிவான நினைவுறுத்தலை பொது சேவைத்துறையின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ முகமட் கைருல் அடிப் அறிவித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்.ஆனால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மிகச் சிலரே. ஆனால் அவர்களும் தடுப்பூசி போடுவது அவசியம் என்கிறார் தலைமை இயக்குநர். அப்படி போடாமல் இருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்கள் மேல் பொது மக்களுக்கு அவமதிப்பையும் ஏற்படுத்தும்.

தடுப்பூசி போடாதவர்கள் அல்லது போட இயலாதவர்கள் சரியான காரணங்கள் இருந்தால் அதனை யாரும் குறை சொல்ல இயலாது. அதனை அரசாங்கம் புரிந்து கொள்ளும். ஆனால் எந்த காரணமுமின்றி தடுப்பூசி போடமாட்டேன் என்று சொன்னால் அது பிரச்சனையை உருவாக்கும்.

தடுப்பூசி போடாதவர்கள் வழக்கம் போல் வேலைக்குப் போகும் போது உடன் வேலை செய்யும் பணியாளர்களுக்கு நிச்சயமாக சங்கடத்தை ஏற்படுத்தும். பணியாளர்களின் நடுவே அவரும் வேலை செய்வது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும். அது இயற்கை தான்.

பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களது பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது ஒரு சிலர் தடுப்பூசி போடாமல் வேலை செய்வது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

குறிப்பாக பள்ளிகளில் தடுப்பூசி போடாமல் பணியாற்றும் ஆசிரியர்களால் பள்ளி மாணவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கோவிட்-19 அபாயம் அதிகமாகவே உண்டு. அதில் ஆசிரியர்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் மாணவர்களின் நிலை என்னாவது! ஆசிரியப் பெருமக்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

அதே போல  அரசு அலுவலகங்களின் பணிபுரிபவர்கள் தடுப்பூசி போடாதவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி பொது மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்? அது பொதுமக்களை அவமதிப்பதற்குச் சமம் தானே! இதெல்லாம் சிக்கலான விஷயம்!

தடுப்பூசி போடுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வேறு வகையான சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்காதவரை இப்போதைய முறையே சிறந்தது. இயற்கை முறை வைத்தியங்கள் சரியானது என்பதாக இன்னும் நிருபிக்கப்படவில்லை.

அரசு ஊழியர்களுக்கு நமது ஆலோசனை எல்லாம் அரசு கடைப்பிடிக்கும் இப்போதைய கொள்கைகளைப் பின்பற்றுங்கள். ஆளுக்கு ஆள் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் நமக்கு வேண்டாம்!

தலைமை இயக்குநர் நல்ல அறிவுறையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். பின்பற்றுவது உங்கள் கடமை!

No comments:

Post a Comment