Wednesday 7 October 2020

யாரை குறை சொல்லலாம்?

 அரசியல்வாதிகள் செய்கின்ற அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டே போகிறது!

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல கொரோனா தொற்றிலிருந்து தேறி வந்த நம்மை திரும்பவும் நம்மை பழையநிலைக்கே இழுத்துக் கொண்டு போய்விட்டனர்.

சபா செல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அவர்களின் தேர்தலை  அங்குள்ள அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா?  இவர்கள் போய் தான் கிழிக்க வேண்டுமா!

மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை அங்கு யாரும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கவில்லை!  உண்மையில் இவர்களின் தலையீட்டை அவர்கள் விரும்பவில்லை!

அமைதியாக இருந்த மாநிலத்தை மண்ணை வாரி இறைத்துவிட்டனர்!

அங்கு கோரோனா தொற்று பெரிய அளவில் இல்லாத நிலையில் இவர்கள் போய் பெரிய அளவில் அதனை பரப்பிவிட்டு அங்கிருந்து இங்கும் கொண்டு வந்து விட்டனர்!

அரசியல்வாதிகளைக் குற்றம் சொல்லாதீர்கள் என்று ஒரு தற்குறி புலம்புகிறது!   அப்புறம் யாரைக் குற்றம் சொல்லுவது?  உங்களுக்கு பதவி வேண்டும்! பட்டம் வேண்டும்! அதிகாரம் வேண்டும்! அனைத்தும் வேண்டும்! அத்தோடு தொற்று நோயையும் தொற்ற வைப்பீர்கள். ஆனால் உங்களை யாரும் குறை மட்டும் சொல்லக் கூடாது! காரணம் நீங்கள் மக்களுக்கு இலவசமாக தொண்டு,  சேவை செய்கிறீர்கள்!

இந்த தொற்று நோயினால் மக்கள் படுகின்ற அவதி என்பது கொஞ்சம் நஞ்சம் அல்ல.  வேலை இழப்பு, குடும்பங்களில் குழப்பம், மாதாந்திர தவணைகள் கட்ட முடியாத நிலை,  கார், வீடு ஏலம் போகிற நிலைமை - இவைகள் பற்றி எல்லாம் அரசியல்வாதிகளுக்குக் கவலை இல்லை.  அவர்கள் எப்போதும் போல ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்! மக்களைப் பற்றி கவலைப்பட  அவர்களுக்கு நேரமில்லை!

இப்போது நாம் சந்திக்கும் இந்த மூன்றாம் அலை கொரோனா தொற்று என்பது நம்மை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு செல்லுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே நாம் இரண்டு மூன்று மாதங்கள் வீட்டிலேயே   அடைந்து கிடைந்தோம்.  அதுவே பெரிய தண்டனை.  மீண்டும் அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்றால் நாம் என்ன அதனை வரவேற்கவா முடியும்?

அதனால் தான் நமக்கு இந்த அரசியவாதிகள் மேல் கடுப்பு ஏற்படுகிறது.கோபம் ஏற்படுகிறது. வசைச் சொற்களால் வசை பாடத்  தோன்றுகிறது!

இதில் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என்கிறார் ஓர் அரசியல்வாதி. பின் யாரைக் குறை சொல்லுவது?

அனைத்துக்கும் காரணம் இந்த அரசியல்வாதிகள் தான்! பொறுப்பற்றவர்களைப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிய வேண்டும்!

கொரோனா தொற்று மீண்டும் பரவுவதற்குக் காரணம் அரசியல்வாதிகளே! அவர்களே தான்! மறுப்பார் இல்லை!

No comments:

Post a Comment