Saturday 30 January 2021

அது என்னடா இளக்காரம்?

 தமிழக திரையரங்குகளில் நூறு விழுக்காடு இரசிகர்களை அனுமதிக்கலாம் என்று தமிழக அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது!

இத்தனைக்கும் கோவிட்-19 குறைந்தபாடில்லை!

ஆனாலும் இந்திய அரசாங்கம் ஐம்பது விழுக்காடு மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கலாம் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. இருந்த போதும் தமிழக அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்றுக்கொள்ளாததால் தான் இப்போது விஜயின் "மாஸ்டர்" படம் முழு திரை அரங்காக ஓடிக் கொண்டிருக்கிறது!

இது எப்படி சாத்தியம்?  விஜய் முதலமைச்சரிடம் நேரிடையாக வந்து பேசினார். சாத்தியாமாயிற்று! ஐம்பது விழுக்காடு முடியாது நூறு விழுக்காடு வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பேரம் பேசினார்கள். சாத்தியாமாயிற்று!

இத்தனைக்கும் கோவிட்-19 இன்னும் குறையவில்லை அதனால் தான் இந்தக் கட்டுப்பாடு என்கிறது  மத்திய உள்துறை அமைச்சு. ஆனாலும் தமிழக அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை!

எப்படி,  இப்படி நடக்க முடியாதது நடக்க முடிந்தது?

இது தான் அரசியல்! விஜய் பேசினார். சரி என்றார்கள்! அவருடைய இரசிகர்களின் வாக்கு ஆளுபவர்களுக்குச் சாதகமாகலாம்! இன்னொன்று: திரையரங்கு உரிமையாளர்கள் பேசினார்கள். அது அரசியல்வாதிகளுக்குப் பணமாக மாறலாம்! இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். இந்த உரிமையாளர்களில் 99% விழுக்காட்டினர் தமிழர் அல்லாதவர்கள்! அவர்கள் குரல் கேட்கப்படுகிறது!

ஆனால் இது நாள் வரை மத்திய அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை தமிழ் நாடு மீது திணித்திருக்கிறது. பதவியில் உள்ளோர் வாய் திறக்கவில்லை! இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் திணிப்பு, மருத்துவக் கல்வியில் ஏழை  மாணவர்கள் புறக்கணிப்பு, விவசாய நிலங்களை அபகரித்தல், தமிழ் மொழி புறக்கணிப்பு, வெளி மாநிலத்தவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை  வாய்ப்பு -  இப்படியோ எத்தனை எத்தனையோ திட்டங்களில் தமிழர்கள், தமிழ் நாட்டில்  புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்! ஆனால் மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியினர் இது நாள் வரை எதிர்த்துப் பேசவில்லை!

ஆனால் ஒரு சினிமா நடிகனுக்காக,  திரையரங்கு உரிமையாளர்களுக்காக தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நின்றிருக்கிறது! ஆனால் இந்த எதிர்ப்பினால் தமிழனுக்கு எந்த பயனும் இல்லை!

நாம் சொல்லுவதெல்லாம் இப்போது எதிர்க்க முடிந்தவர்களால், எதிர்க்க வேண்டிய எத்தனையோ பிரச்சனைகளில், ஏன் எதிர்க்கவில்லை என்பது தான்!

மாநிலத்தை ஆளுபவனுக்கே தமிழன் என்கிற உணர்வு இல்லை! இவனுக்கே தமிழனைக் கண்டால் இளக்காரம்! விரட்டி அடிக்கும் காலம் வரும்!

No comments:

Post a Comment