நாம் அதிகமாகவே பேசி விட்டோம் என்று நினைக்கிறேம்!
ஆமாம், கடந்த ஒரு சில வாரங்களாக நமது முக்கிய பிரச்சனைகளையெல்லாம் மறந்து விட்டு, ஜாவி மொழிக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்று யோசிக்க வேண்டியுள்ளது!
நமது தலை போற காரியங்களுக்கெல்லாம் விடுமுறை கொடுத்துவிட்டு இப்போது ஜாவிக்கும், நாயக்கிகும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்!
நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது கட்டுக்குள் அடுங்குவதாக இல்லை. ஏறிய விலைகள் ஏறியது தான்! குறையும் என்னும் உத்தரவாதமும் இல்லை.
நூறு நாள்களில் தீர்த்து வைப்போம் என்னும் தேர்தல் வாக்குறுதியையும் ,மறந்து போனோம்! இப்போது நமது பிரச்சனைகள் அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பதும் தெரியவில்லை.
இதனையெல்லாம் மறந்து போகும்படி கடந்த சில வாரங்களாக ஜாவியும், ஜாகிரும் முட்டி அடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து விட்டனர்! நாம் என்ன செய்ய?
இதற்கெல்லாம் நாம் கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டும். ஆமாம், ஜாவி எழுத்து என்பது கல்வி அமைச்சு கொண்டு வந்த ஒரு திடீர் அதிர்ச்சி! ஜாகிர் நாயக் என்பது நெருப்பு என்று தெரிந்தும் நெருப்பில் கை வைக்கின்ற முயற்சி!
நடந்தது அனைத்தும் அரசாங்கத்தின் துணையோடு! ஆனால் பழியோ மக்கள் மீது! உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் ஓர் அறிவிப்பைச் செய்கிறார். இன.சமய உணர்ச்சிகளைத் தூண்டாதீர்கள் என்கிறார். இன, சமய பிரச்சனைகளை வைத்து அரசியல் நாடகம் நடத்தியவர் இஸ்லாமிய சமயப் போதகர், ஜாகிர் நாயக்! இவர் உள்நாட்டில் அடைக்கலம் புகுந்தவர். ஆனால் பேச்சு என்னவோ இன, மதத் துவேஷ பேச்சுக்கள்! இத்தனை ஆண்டுகள் இல்லாத பிரச்சனைகளை இவர் கிளப்பிக் கொண்டிருக்கிறார்!
இத்தோடு இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டுவோம். ஜாவி என்பது தக்கவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். ஜாகிர் என்பது காவல்துறையின் கையில். இனி பேசுவதைக் குறைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். இப்போது நாட்டின் முன்னேற்றம் என்பதே நமது குறிக்கோள்!
இனி அடுத்த காரியத்தைக் கவனிப்போம்!
No comments:
Post a Comment