Tuesday 25 January 2022

கவலை வேண்டாம்!

 

டாக்டர் மகாதிர் கடந்த சில நாள்களாக கோலாலம்பூர், ஐ.ஜே.என். என்று சொல்லப்படும் தேசிய இருதய கழகத்தில்  சிகிச்சைப் பெற்று வருகிறார்.

முன்னாள் பிரதமர்,  அதிலும்  வயதானவர் என்கிற ஓர் அனுதாபம் அவர்மீது நமக்கு உண்டு.  அனுதாபம் என்பதை அவர் விரும்பமாட்டார்.

நாட்டை முன்னேற்றத்திற்குக்  கொண்டு வந்தார் என்று சொன்னாலும் அவர் கையாண்ட முறை முறையற்றது என்று பல பேர் சொன்னாலும், நிறைய குறைகள் சொன்னாலும் அப்படி சொல்லுவதில் எந்தத் தவறுமில்லை!

அவர் கொண்டு வந்த முன்னேற்றத்தின் போது நமது இனமும் முன்னேற்றம் கண்டது என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அதனை இத்தோடு முடித்துக் கொள்வோம்.

டாக்டர் மகாதிரின் உடல்நிலை பற்றி  வதந்திகள் உலவுவது இயற்கையே. அது தான் சொன்னேனே அவரின் வயது அப்படி என்று! வெளியார் எவரும் அவரை மருத்துவமனையில் காண அனுமதியில்லை குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அவரது மகள் மரினா மகாதிர் தந்தையுடன் இருக்கிறார். இப்போது அவரின் உடல்நிலை தேறி வருவதாக அவர் கூறுகிறார்.

மகள் சொல்லுவது சரியாகத்தான் இருக்கும். நம் நாட்டுக்கும் நமக்கும் நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர். பல வழிகளில் நம்மை உயர்த்த வேண்டும் என்று நினைத்தவர். பாடுபட்டவர்.

அவர் உடல்நிலை சீரடைய வேண்டும். மேம்பாடு அடைய வேண்டும். அவருக்காக, அவரின் உடல்நிலைக்காக நாம்  வேண்டுதல் செய்ய வேண்டும். நம்மால் செய்ய முடிந்தது அவ்வளவு தான்.

அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். நீண்ட நாள் வாழ வேண்டும். நாட்டுக்கு நல்லதைச் செய்ய வேண்டும்.

இறைவனை பிரார்த்திபோம்!

No comments:

Post a Comment