தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் நடக்கிறது! தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது! யாரை நோவுவது?
கஞ்சா கடத்தும் மலேசியப் பெண்கள் அதிலும் குறிப்பாக மலேசிய இந்தியப் பெண்கள் பல நாடுகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்கிற செய்தியை முன் ஒரு முறை படித்ததுண்டு.
ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பல பெண்கள் சிறையில் அடைப்பட்டிருக்கின்றனர். ஒரே காரணம் தான். அனைத்தும் கஞ்சா கடத்தல் வழக்குகள்.
அகப்பட்டால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நாம் வெளிநாடு போக வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டிலேயே கஞ்சா விற்றால் என்ன தண்டனை என்பது நமக்குத் தெரியும். இங்கு என்ன தண்டனையோ அதே தண்டனை தான் மற்ற நாடுகளிலும். கஞ்சா விற்பனையை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. மிக மிகக் கொடியது. சமரசம் பேச வாய்ப்பில்லை!
இந்த நிலையில் இந்தப் பெண், கலைவாணி முனியாண்டி, என்பவர் வியட்னாமில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார். கலைவாணி பல நாடுகளுக்குச் சென்று மற்றவர்களின் பொருட்களைக் கொண்டு போவதும், கொண்டு வருவதுமான தொழிலில் ஈடுபட்டிருப்பவர்.
அவர் கடைசியாக மலேசியாவிலிருந்து வியட்னாமுக்குப் பயணம் செய்து அங்கிருந்து பிரேசில் நாட்டுக்குப் பயணமாகியிருக்கிறார். பின்னர் பிரேசிலிலிருந்து ஓர் ஆப்பரிக்க நபர் ஒருவர் கலைவாணி மூலம் வியட்னாமில் உள்ள ஒர் ஆப்பரிக்க நபருக்குச் சில உணவுப் பொருட்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்த உணவுப் பெட்டிகளில் போதைப் பொருட்கள் இருந்ததாக வியட்னாம் அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் கைது செய்திருக்கின்றனர்.
இப்போது தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் கலைவாணி இனி ஒளியைக் காண முடியாது.
நாம் சொல்ல வருவதெல்லாம் போதைப் பொருள்களைக் கடத்தும் வேலையில் ஈடுபட வேண்டாம் என்பதே. பிடிப்பட்டால் அதன் முடிவு என்னவென்பது உங்களுக்கே தெரியும்.
இதில் பாவ புண்ணியம் பார்க்கும் நிலையில் யாரும் இல்லை. மனித உயிர்களின் மேல் பாசம் இல்லதவர்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!
தூக்குத் தண்டனை? வேதனையே!
No comments:
Post a Comment