Sunday 20 September 2020

மக்கள் என்ன முட்டாள்களா?

 மக்களை முட்டாள்கள் என்று நினைக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் வளர்ந்து விட்டார்கள்!  அவர்களை நாம் வளர்த்து விட்டுவிட்டோம்!

சபாவில் நடைபெறுகின்ற தேர்தலுக்குச் சொர்க்கத்திற்கு  வழி காட்டியிருக்கிறார்கள் பாஸ் கட்சியினர்!  அவர்களுக்கு வாக்களித்தால்  நமக்குச் சொர்க்கத்தை உறுதிப் படுத்தி விடுவார்கள்!

எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்! சொர்க்கம்-நரகம் முதலில் இருக்கிறதா, இல்லையா  என்று யாருக்குத் தெரியும்?  இதுவரை பாஸ் கட்சியிலிருந்து எத்தனை பேர் சொர்க்கத்திற்குப் போய் வந்திருக்கிறார்கள்? அல்லது நரகத்திற்குத் தான் போய் வந்திருக்கிறார்களா? நரகம் என்று ஒன்று இருந்தால் அரசியல்வாதிகள் இந்நேரம்  நரகத்தையே நிரப்பியிருப்பார்களே!  சொர்க்கத்தை இலஞ்சம் கொடுத்தே வாங்கியிருப்பார்களே!

அட! சந்திர மண்டலத்திற்குப் போகக் கூட  மேல் நாடுகளில் இப்போதே பல கோடிகளைச் செலவு செய்து முதலிலேயே  முன்பதிவு செய்கிறார்களாம்.

பாஸ் கட்சியினர் இந்த அளவுக்கு உறுதியாக இருந்தால் அவர்களும் இப்போதே  சொர்க்கம் போவதற்கு முன் பதிவு செய்யலாமே! அது வேண்டாம், இப்போதே போய்வர ஏற்பாடுகள் செய்யுங்களேன்! அப்படி செய்தால் உங்களையும் நம்பலாம்! உங்கள் சொர்க்கத்தையும் நம்பலாம்!

உங்கள் மாநிலத்தில் உள்ள நரகத்தையே எந்த முயற்சியும் செய்யாமல் அப்படியே போட்டு வைத்திருக்கிறீர்களே அப்புறம் என்ன சபா மக்களுக்குச் சொர்க்கத்தைக் காண்பிக்கிறீர்கள்?

இப்போது தான் கெடாவில் உங்கள் ஆட்சி கைக்கு வந்ததும் ஓரு கோயிலையே உடைத்து நொறுக்கினீர்கள். மற்றவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு மரியாதை கொடுக்காத உங்களுக்கு எங்கிருந்து இப்படி பேசுவதற்குத் தைரியம் வந்தது? 

நாம் பாஸ் கட்சியினருக்குச் சொல்ல வேண்டியது ஒன்று தான். வேண்டாம்! பொய் பேச வேண்டாம்! பதவியில் அமர வேண்டும் என்பதற்காக எதனை வேண்டுமானாலும் பேசலாம், எந்த உறுதியும் கொடுக்கலாம் என்று நினைக்காதீர்கள். 

ஆமாம் பதவியில் இருந்தால் நல்லது செய்யலாம், உண்மை தான். ஆனால் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்பது நீங்கள் ஆளுகின்ற மாநிலங்களைப் பார்த்தாலே போதுமே! 

பாஸ் கட்சியினரே! மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு இராதீர்கள். நீங்கள் முட்டாள்கள் என்று நினைப்பதால் தான் இன்று உங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலையின் காரணமாக சிங்கப்பூரை அடைத்துக் கொண்டு நிற்கிறார்கள்!

மக்களை ஏமாற்ற வேண்டாம். அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றத்தான் வேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை! அதனை நீங்களே தான் ஏற்படுத்திக் கொண்டீர்கள்!

சொர்க்கத்திற்கு வழி காட்ட யாராலும் முடியாது! ஒன்று முடியும். நீங்கள் - அரசியல்வாதிகள் - நினைத்தால் சொர்க்கத்தை இங்கே பூமிக்குக் கொண்டு வர முடியும்! அதைச் செய்யுங்கள்!

தொடர்ந்து மக்களை முட்டாள்களாகவே வைத்திருக்க நினைக்காதீர்கள்! அப்படி நினைத்தால் உங்களைப் போல் முட்டாள்கள் யாருமில்லை!

 

No comments:

Post a Comment