Saturday 18 December 2021

நலமோடு திரும்ப வேண்டும்!

 

                                                                    Dr.Mahathir Mohamad

நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் பற்றி  புதிதாக சொல்ல எதுவுமில்லை!

அவரைப் பற்றி முழுமையாகவே நாம் அறிந்திருக்கிறோம். இரண்டு முறை மலேசியாவின் பிரதமர் பதவியை வகித்தவர். 

இப்போது அவருக்கு வயது 96. வழக்கமான இருதய சிகிச்சை சோதனைக்காக   ஐ.ஜே.என். (IJN) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற  சோதனைகள் அவருக்கு  ஒன்றும் புதிதல்ல. வழக்கமான ஒன்று தான். இருதய சிகிச்சைப் பெற்றவர்கள் தொடர்ந்து தொடர் சோதனைகளை மேற்கொள்வது இயல்பு தான். 

பார்வையாளர்கள், நெருங்கிய உறவுகளைத்தவிர,  வேறு யாரும் அவரைப் பார்க்க அனுமதியில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. எல்லாமே கொஞ்சம் கெடுபிடியாகத்தான் இருக்கும். காரணம் அவரின் வயது அப்படி. மிக எளிதில் தொற்று பரவக்கூடிய அபாயம் உண்டு.  அதனால் தான் இவ்வளவு கெடுபிடிகள்!

மகாதிர் மீதான பல்வேறு விமர்சனங்கள் நமக்கு உண்டு. நாட்டை மிக உயரிய நிலைக்குக் கொண்டு சென்றவர் அவர். அதே சமயத்தில் நாட்டை தொப்பென்று போட்டு தொந்தி சரிய வைத்தவரும்  அவர்!

அவர் திட்டங்கள் எதுவும் முழுமையான வெற்றி பெற்றதாக ஒன்றுமில்லை. பூமிபுத்ராக்கள் வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர். அதற்காக பல கோடிகள் கொட்டப்பட்டன! ஆனால் கோடிகள் குப்பைக்குப் போனது தான் மிச்சம்! அதில் ஒரு சிலர்  கிளர்ந்து எழுந்தனர்! ஆனாலும் எத்தனை நாளுக்கு என்கிற கேள்விகள் தான் தொடர்கின்றன! ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர்! இலஞ்சம், ஊழல் என்பதில் அவர்களை அடித்துக் கொள்ள ஈடு இணையில்லை! வர்த்தகம், தொழில் மயம் என்பதெல்லாம் இலஞ்சம், ஊழல் என்பதாக மாறிப் போயிற்று!  உச்சியிலிருந்து அடிபாதம் வரை நீக்கமற நிறைந்துவிட்டது!

இந்தியர்கள் விஷயத்தில் அவர் நினைத்தது நிறைவேறிற்று! அவருக்கு உகந்த இந்திய தலைகளை வைத்து அதனை நிறைவேற்றிக் கொண்டார்! இதுவரையில் இந்தியர்களால் தலைதூக்க முடியாமல் இருப்பது அவருக்கு அதிலே ஒரு சந்தோஷம்!

ஆனாலும் அவர் மேல் நமக்கு  எந்த வெஞ்சினமும் வேண்டாம். நாமும் அவரின் சில செயல்களால் பலனடைந்தவர்கள் தான். ஆனால் கடைசியாக அவர் செய்த செயலை - பக்காத்தான் அரசாங்கத்தைக்  கவிழ்த்ததை -  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

ஆனாலும் எல்லாம் நன்மைக்கே! என்று நினைத்து நமது காரியங்களை நாம்  செய்வோம்!  என்ன தான் ஆயிரம் ஆயிரம் திட்டங்கள் போட்டாலும் நம்மை நசுக்கி விட முடியாது என்பதை மறக்க வேண்டாம்!

டாக்டர் மகாதிர் நலமே வரவேண்டும். அவருக்காக பிரார்த்தனை செய்வோம்!

No comments:

Post a Comment