நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்னும் செய்தி பொதுவெளியில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது!
இது நடக்கக் கூடாது என்பது தான் மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்க முடியும். நாம் அடிபட்டவர்கள். ஏற்கனவே சபா தேர்தலின் விளைவுகள் என்ன என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுமட்டும் அல்ல. நாம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அதன் பலனை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதார ரீதியில் நாடு திணறிக் கொண்டிருக்கிறது என்பது புது செய்தியல்ல. படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது நாட்டின் பொருளாதாரம். அது பற்றி அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்து விடுகிறது! நாட்டின் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் அவர்களுக்குப் பாதிப்பில்லை!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. பொதுத் தேர்தல் பொது மக்களுக்கு எமனாக அமையும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.
மேலும் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு மாமன்னரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. நாட்டின் நிலை அறிந்தவர் மாமன்னர். அடுத்த தேர்தல் என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இப்போது இருக்கின்ற நிலைமையில் அரசாங்கத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். புதிய பிரதமர் தேவை என்றால் அதனையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அல்லது வேறு மாற்றங்கள் கொண்டு வரவேண்டுமென்றால் அதையும் செய்யட்டும். எதைச் செய்தாலும் அடுத்த பொதுத் தெர்தல் வரை ஏதோ ஒன்றை செய்து தான் ஆக வேண்டும்.
ஆனால், எக்காரணத்தைக் கொண்டும், பொதுத்தேர்தல் நடத்த எந்த ஆலோசனையும் தேவையில்லை. பொருளாதாரம் சீர்குலைந்து போயிருக்கும் இந்த நேரத்தில் தேர்தல் என்று சொல்லி பல கோடிகளைச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை!
அடுத்த தேர்தல்வரை ஒரு தற்காலிகத் தீர்வு தேவைப்படுகிறது. அது புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதாக இருக்கலாம். இருப்பவரை நீட்டிக்க வைக்கலாம். அதனை மாமன்னர் தான் தீர்மானிக்க வேண்டும்.
நாடாளுமன்றக் கலைப்பு என்பது தேவையற்ற ஒன்று!
No comments:
Post a Comment