நல்ல காலம் வரப்போகுது என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன!
ஒரு சில செய்திகளை வைத்தே நாம் இதனைக் கணக்கிடலாம். இந்த முறை அரசாங்கம் பேரரசரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாய்ப்பிருக்கிறது. கட்டுப்பாட்டில் என்பதைவிட ஆலோசனையில் நடக்கும் அரசாங்கமாக இருக்கும்.
சட்டப்படி பேரரசர் நாட்டு நடப்பில் தலையிட முடியாது என்று சொன்னாலும் ஆலோசனை சொல்லலாம் அல்லவா? கடந்த முகைதீன் யாசின் ஆட்சியில், ஆட்சி பீடத்தில் இருந்த அனைவருமே, தலைகால் புரியாமல் ஆடியது மறந்துவிடவா முடியும். கடிவாளம் இல்லாத குதிரையை அடக்க முடியவில்லையே!
மீண்டும் அப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்பதில் பேரரசருக்கும் அக்கறை இருக்கத்தானே செய்யும். ஜொகூர் சுல்தானுக்கு ஜொகூர் மாநிலத்தின் மீது அக்கறை இருப்பது போல பேரரசருக்கு இந்த நாட்டின் மீது அக்கறை இல்லாமலா போகும்?
சட்டம் என்னவோ சொல்லட்டும். ஆனால் நாட்டு மக்களுக்கு பேரரசரின் மீது மரியாதையும் மதிப்பும் இருப்பது போல நமது நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த மதிப்போ மரியாதையோ இல்லாமலா போகும். பின்னால் முனகலாம் முன்னால் முடியாது அல்லவா? அரசரை அவமதித்தால் நாளை எந்த அரசியல்வாதியையும் மக்கள் மதிக்கமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்!
எனவே பேரரசருக்கு அவர் நாட்டின் மீது அக்கறை இருப்பதில் ஒன்று வியப்பில்லையே. ஆலோசனைகள் கூறுவதால் என்ன கெட்டுப் போய்விடும். குதிரை தறிகெட்டு ஓடாமல் இருப்பதற்கு கடிவாளம் தேவை தானே. அதனால் ஊழலில் ஊறிப்போன அரசியல்வாதிகளை அவர்கள் விருப்பப்படியெல்லாம் இனி விட்டு விட முடியாது. அதற்குத்தான் பேரரசரின் ஆலோசனைகளும், அரவணைப்பும்!
இனி அடுத்த பொதுத் தேர்தல்வரை ஆளும் அரசியல்வாதிகள் தங்களது விருப்பத்திற்கு இணங்க இயங்க முடியாது என்று நம்பலாம். மக்கள் இப்போதே முகைதீன் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் தான் முகைதீன் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது.
மக்கள் நல்லதொரு அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள். கோவிட்-19 ஒழிக்கப்பட வேண்டும். அதோடு மக்கள் மீண்டும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.
நல்ல காலம் ஆரம்பம்! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment