மலேசியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். அனைத்து தடுப்பூசிகளுக்கும் நல்ல எதிர்ப்பு சக்திகள் உள்ளன.
இதனைக் கூறியிருப்பவர் எந்த அரசியல்வாதியும் அல்ல. நமது சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா.
நமது நாட்டில் ஒரே விதமான தடுப்பூசிகள் பயன்படுத்துவதில்லை. ஃபசார், சைனொவேக்ஸ் இப்படி சில வகையான தடுப்பூசிகளை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக தடுப்பூசிகளில் ஃபசார் ஊசியையே மக்கள் விரும்புகின்றனர். காரணம் ஏதோ ஒரு வகையில் அந்த ஊசியையே அதிகம் முன்னிலைப் படுத்துவதால் அதுவே மக்களின் தேர்வாக அமைந்துவிட்டது. ஒரு சிலர் ஃபசர் ஊசியைத் தவிர வேறு ஊசிகள் வேண்டாம் என்று மறுத்துவிட்ட நிகழ்வுகளும் உண்டு.
ஆனால் நமது சுகாதார இயக்குனர் அப்படி ஒரு அச்சம் தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். சரவாக் மாநிலத்திலும் லாபுவான் மாநகரிலும் போட்ட தடுப்பூசிகள் மூலம் தொற்றின் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்கிறார் அவர்.
"மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படுபவர்கள், சுவாசக் கருவிகளின் பயன்பாடும் பெரும் அளவில் குறைந்திருக்கிறது" என்கிறார் டாக்டர் நோர்.
அதனால் மலேசியாவில் பயன்படுத்தும் தடுப்பூசிகள் நல்ல தடுப்பாற்றலைக் கொண்டவை. குறிப்பாக டெல்டா வைரஸ் ஸையும் எதிர்க்கும் ஆற்றலையும் கொண்டவை. அதனால் டெல்டா வைரஸ் பற்றி கவலை வேண்டாம்.
முதலில் தடுப்பூசி போடுவது தான் நமது வேலை. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு தடுப்பூசி போடாமல் இருப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகம். துரோகமா? ஆமாம்! ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லையென்றால் உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து! ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்தாக முடியலாம்.
இதனை நாம் இங்கே வலியுறுத்தக் காரணம் நம் அனைவருக்குமே பொறுப்புணர்ச்சி வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்.
இன்னும் நாம் நமது நாட்டில் சுதந்திரமாக இயங்க முடியவில்லை. குழந்தைகள் பள்ளி போக முடியவில்லை. குடும்பத் தலைவர்கள் வேலைகளுக்குப் போக முடியவில்லை. அனைவரும் வீடுகளில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனர்.
வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது. எப்போதும் போல நாம் நமது அன்றாடப் பணிகளுக்குச் செல்ல வேண்டும்.
இதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் நாம் நமது கடமைகளைச் செய்ய வேண்டும். தடுப்பூசியைப் போடுங்கள். காரணம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
கடைசியாக, தடுப்பூசி போடப் பயப்படாதீர்கள்
No comments:
Post a Comment