தமிழ்ப்பட இயக்குனர், செல்வராகவன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு செய்தி:
"நான் எடுத்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் 18 கோடியில் எடுக்கப்பட்டது. அதனை ஒரு பிரமாண்டமான படம் என்பதாகக் காட்ட எண்ணி 32 கோடியிலான படம் என அறிவித்தோம்! போட்ட பணம் கிடைத்தது! இரசிகரிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை!"
பிரமாண்டம் என்றால் அது இயக்குனர் ஷங்கர் தான்! அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொய் சொல்லலாம். ஆனால் அந்த பிரமாண்டத்தை காட்சியில் கொண்டு வர வேண்டுமே!
இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அப்போது சொன்ன பொய்யை, இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரே காரணம் தான். "முரண்பாடுகள் இருந்தாலும் பொய் சொல்லாதே!" என்பதை இப்போது தான் கற்றுக் கொண்டதாக அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார். இப்படிச் சொல்லுவதற்கே ஒரு பெருந்தன்மை வேண்டும். அது அவரிடம் இருக்கிறது.
இங்கு நம்மிடையே உள்ள சில அரசியல்வாதிகளைப் பார்ப்போம். பொய் சொல்லியே வளர்ந்தவர்கள், சமுதாயத்தை ஏமாற்றியே கோடிகளைச் சேர்த்தவர்கள், தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய நிலங்களைத் தங்களது குடும்பச் சொத்தாக்கியவர்கள் - இவர்கள் உண்மையைச் சொல்லுவார்களா? சொல்லமாட்டார்கள்! இயக்குனர் செல்வராகவனுக்கு அந்தப் பொய்யை மறுத்துப் பேச பத்து ஆண்டுகள் ஆகின. ஆனால் இவர்களுக்கு? ஊகூம்! உண்மை வரவே வராது! அப்படியே உண்மை வரும் என்றாலும் அவர்களுடைய வாரிசுகள் அவர்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவார்கள்
ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் உண்மைக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள்! அவர்கள் தங்களுடைய பொய்களை என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அது அவர்களுடைய பிறப்பிலேயே தவிர்க்கப்பட்டு விட்டது! அதனால் தான் அரசியல்வாதிகள் தொடர்ந்து சாகும் வரையில் அயோக்கியர்களாகவே இருக்கிறார்கள்! தங்களை மாற்றிக் கொள்வதே இல்லை!
இந்திய நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்தி அவர்கள் உண்மையைத் தான் பேசினார். தனது தவறுகளை அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். அவரை உலகமே போற்றுகிறது.
கவிஞர் கண்ணதாசன் ஒரு திறந்த புத்தகம். அவர் பொய் சொன்னார் என்பதாகச் சரித்திரம் இல்லை. தனது மனதில் பட்டதைப் பேசினார். எழுதினார். அவருக்குச் சாவு என்பதில்லை. அவரது எழுத்துகள் என்றென்றும் போற்றப்படும்.
உண்மையை எப்போது வேண்டுமானாலும் ஒப்புக்கொள்ளலாம். உண்மையே நிரந்தரம்!
No comments:
Post a Comment