Sunday 29 August 2021

தமிழுக்கு அமுதென்று பேர்!

 "தாயகம்" என்னும் தமிழ் வானொலி ஒலிபரப்பு ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து ஒலிபரப்பப்படுவதை பலர் அறிந்திருப்பர். நானும் காலை நேரத்தில் இடையிடையே கேட்பதுண்டு.

அதனை நடத்துபவர்கள் இலங்கைத் தமிழர்கள். அவர்கள் பேசுகின்ற யாழ்ப்பாணத் தமிழ் எனக்குப் பிடிக்கும். சில சமயங்களில்  அவர்கள் பயன்படுத்துகிற சில வார்த்தைகள் என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை! அதனால் என்ன பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு வேளை ஒரு சில வார்த்தைகள் சிங்கள வார்த்தைகளாகக் கூட இருக்கலாம்.   நாம் பேசுகின்ற போது மலாய் மொழி எப்படிச் சரளமாக வந்து விழுகிறதோ அதே போல சிங்களமும் கூடவே அவர்களுக்கும் வரலாம். அதுவும் சாத்தியம்.

அதே போல சென்னை தமிழ் என்கிறார்களே அது கூட பேசும் போது ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது!  அதனை நாம் சும்மா ஒதுக்கிவிட முடியாது. வட சென்னை மக்கள் பயன்படுத்தும் மொழி அது. அதுவும் ஒரு கலப்புமொழி என்று சொல்லப்படுகிறது. தமிழோடு ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, உருது என்று அனைத்தும் கலந்த தமிழ் மொழி அது. இருந்து விட்டுப் போகட்டும். எப்படியோ நம்மால் புரிந்து கொள்ள முடிகிற வரை சரிதான்!

வட சென்னை மக்கள் பயன்படுத்தும் ஒரு வார்த்தையைச் சமீபத்தில்  தெரிந்து கொண்டேன். இயக்குநர் ரஞ்சித் படமான சார்ப்பட்டா பரம்பரையில் "கெலிச்சே ஆகணும்!"  என்னும் வார்த்தை புதிதாக இருந்தது. கெலிச்சே என்பது வெற்றியைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அது எந்த மொழியில் இருந்து வந்த சொல் என்பது தெரியவில்லை. ஒரு வேளை அது தமிழ்ச் சொல்லாகக் கூட இருக்கலாம்.  தமிழில் உள்ல பல சொற்களை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் எங்கோ எந்த மூலையிலோ, நாம் எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல  தமிழ்ச் சொற்களைக் கேட்க முடியும்!

நாம், மலேசியர்கள், பேசுகின்ற மொழி கூட தமிழக பட்டிமன்ற பேச்சாளர்களின்  கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது!  நாம் பயன்படுத்தும்,  என்ன'லா, இல்லை'லா, அது ரொம்ப சின்னாங்கு - இப்படிப்பட்ட சொற்கள் எல்லாம் மலாய் மொழியின் தாக்கம் தான்! அதே போல சீன மொழி சொற்களும் நமது பேச்சுனூடே வருவதும் உண்டு.

ஆனாலும் இந்த மாற்றங்கள் எல்லாம் தவிர்க்க முடியாதவை. தமிழ் எந்த நாட்டிலெல்லாம் பேசப்படுகின்றதோ அந்த நாட்டு மொழியோடு தமிழ் கலந்து விடுவது இயல்பு தான்.

இப்படி எல்லாம் பேச்சு வழக்கில் மாற்றங்கள் வந்தாலும் தமிழ் என்னவோ இன்னும் சீர் இளமையோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது!

No comments:

Post a Comment