Friday 6 August 2021

நான் விலகுவதாக இல்லை!

 "நான் விலகுவதாக இல்லை! எனக்குப் போதுமான ஆதரவு இருக்கிறது! செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் போது அதனை நான் நிருபிப்பேன்!" என்று மீண்டும் தனது நிலையை உறுதிபடுத்தியிருக்கிறார் பிரதமர் முகைதீன்!

முகைதீன் என்று பிரதமர் பதவியைக் கைப்பற்றினாரோ அன்றிலிருந்தே அவர் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு வருகிற ஒரே மந்திர வார்த்தை  இது தான். "எனக்கு ஆதரவு உண்டு!" என்கிற ஒரே வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொல்லியே,  அதை நிருபிக்க முடியாமல்,  பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்! அது தான் அவரது சாமர்த்தியம்!

பதவியில் நீடிக்க,  மக்களின் வரிப்பணத்தில் பல "தியாகங்களை!"  தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்! தகுதியற்றவர்களை எல்லாம் பல பதவிகளில் அவர் அமர்த்தியிருக்கிறார். ஆகக் கடைசியாக ஒருவரை தனக்கு ஆலோசகராக நியமித்திருக்கிறார்! எனன ஆலோசகர்? புரியவில்லை! அதோடு மட்டும் அல்லாமல் அவர் ஓர் அமைச்சர் அந்தஸ்த்தைப் பெற்ற ஆலோசகராக இருப்பார்! அமைச்சர் பதவியைக் கொடுக்க முடியாததற்கு  இப்படிப்பட்ட ஆலோசகர் பதவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்! இவர் பதவியில் நீடிப்பதற்கு இன்னும் எத்தனை அமைச்சர் பதவியை உருவாக்குவாரோ, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! பிரதமர் பதவிக்காக அவர் செய்கின்ற தியாகங்கள் நம்மைக்  கண் கலங்க வைக்கின்றன!

நாடாளுமன்றத்தை இந்த மாதம், ஆகஸ்ட் 9-ம் தேதியன்று கூட்ட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. ஆனால் பிரதமரோ அடுத்த மாதம் (செப்டம்பர்) நாடாளுமன்றம் கூடும் என்கிறார்! ஆக, அவர் சொல்லுவது தான் நடக்கும் என நம்பலாம்!

இதுவரை எதிர்க்கட்சிகள் சொன்ன ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா? ஒன்றுமேயில்லை! இவர்கள் கத்தோ கத்து என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்! அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! என்னன்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள்! ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்! எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்! ஊகூம்! எதுவுமே நடக்கவில்லை! ஒன்றும் அசையவில்லை!

முகைதீன் கையில் நல்லதொரு ஆயுதத்தை வைத்திருக்கிறார்.  அவர் பதவி ஏற்ற காலத்திலிருந்தே அவருக்கு அது கை கொடுக்கிறது. அது தான் கோவிட்-19. இன்றளவும் அந்தத் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வராததற்குக் காரணம் அது திட்டமிட்டே பரப்பப்பட்டது தான்! இன்றளவும் அந்தத் தொற்று அவருக்குக் கை கொடுத்துக் கொண்டு வருகிறது என்பதில் எந்த ஐயமுமில்லை!

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூட்ட  முடியாததற்குக் காரணமும் கோவிட்-19  தான்!  அதைத்தான் அவர் மீண்டும் மீண்டும் சொல்லுவார்! அவர் சொல்லுகின்ற வார்த்தை தான் இறுதியானது!

நான் விலகுவதாக இல்லை! அதற்கு அவசியம் இல்லை! எனக்கு ஆதரவு உண்டு!

No comments:

Post a Comment