Sunday 8 August 2021

கொள்கலன் தயார்!

 கெடா மந்திரி பெசார் கொள்கலன்கள் தயார் என்கிற அதிர்ச்சி செய்தியை வெளியிட்டிருக்கிறார்! நான் தயார்! நீங்கள் தயாரா! என்பது தான் அவர் எழுப்பியிருக்கும் எதிர் கேள்வி!

பொதுவாகவே கெடா மந்திரி பெசார், சனூசி முகமது நூர், கொஞ்சம் அதிகமாகவே துடுக்குத்தனமாக பேசி பின்னர் வாங்கிக்கட்டுபவர் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை! இதுவரை அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!

உண்மையில் அவரைப்பற்றி நாம் பேசும் போது ஒன்று நமது ஞாபத்திற்கு வரும்.  "பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்கிற மாதிரி!" என்கிற மொழி நமது ஞாபத்திற்கு வரும்!

அவர் சார்ந்த கட்சி எந்தக் காலத்திலும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு ஏற்பட்ட சில குளறுபடிகளால் இவர் மாநிலத்தில் மந்திரி பெசார் என்கிற கெட்ட காலம் ஏற்பட்டது! இப்போதும் மிட்டாய் கடை ஞாபகத்தில் இருப்பது தான் அவருடைய பொறாத காலம்!

நாட்டில் கோவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் பத்தாயிரத்திற்கு மேல்  தாண்டிவிட்டது. அவர் மாநிலத்திலும் கணிசமான அளவு இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 

ஆனாலும் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிண்டலடித்திருக்கிறார்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட்-19 மரண எண்ணிக்கையைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியது போது  அவர் இப்படி பதிலளித்திருக்கிறார்: "இறந்தவர்களின் உடலை வைத்திருக்க போதுமான கொள்கலன்கள் உள்ளன. உள்ளே போக விரும்புவோர்  பெயரைக் கொடுக்கலாம்"  அவர் சொன்னதிலிருந்து ஒன்று நமக்கு விளங்குகிறது. "நான் பெயரைக் கொடுத்துவிட்டேன்! நீங்களும் பெயரைக் கொடுங்கள்!" என்பதாக நாம் எடுத்துக் கொள்கிறோம்!

இவரைப் போன்ற மனிதர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.  வழிபாட்டுத்தலங்களை உடைத்து நொறுக்கிய மனிதர்கள் பொதுவாக கொடூர மன படைத்தவர்களாகத் தான் இருப்பார்கள்.  அவர்களில் இவரும் ஒருவர். இவர்கள் மற்றவர்களின் துயரத்தில் இன்பம் காண்பவர்கள்!

இவருக்கு என்ன சொன்னாலும் உறைக்கப்போவதில்லை. பதவியில் இருந்தாலும் புத்தி என்னவோ புழுதியில் தான் இருக்கும்!

கொள்கலன் தயார்! அவருக்கும் சேர்த்துத் தான்!                   

No comments:

Post a Comment