அரசாங்கத்தாருக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை! இவர்களையும் கவனியுங்கள். அவர்களும் பிழைக்க வேண்டும். பிள்ளைக்குட்டிகளைப் பார்க்க வேண்டும்.
சிகை அலங்காரக் கடைகளைத்தான் சொல்லுகிறேன். கடைகளைத் திறக்கா விட்டாலும் வாடகைக் கட்டித்தான் ஆக வேண்டும். வருமானம் இல்லாமல் எப்படி வாடகைக் கட்டுவது?
பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் திறக்கப்பட்டு அங்கிருந்து தான் கோவிட்-19 அதிகமாகப் பரவுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அவைகள் மூடப்படவில்லை.
கடைகள் பத்து வாரங்களாகத் திறக்கப்படவில்லை. திறக்கப்படாமல் இருப்பதைவிட சில நிபந்தனைகளுடன் கடைகள் திறக்கப்படுவது சிறப்பாக இருக்கும்.
முதலில் தொழில் செய்பவர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அது கட்டாயம். அடுத்து ஒரே நேரத்தில் இருவருக்கு மேல் கடைக்குள் அனுமதிக்கக் கூடாது. அந்த வாடிக்கையாளர்களும் தடுப்பூசி போட்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு முடி வெட்டத் தடை விதிக்க வேண்டும். என்ன செய்வது? பாதுகாப்பு என்பது இரு பக்கமும் தேவை. இப்படி செய்வதன் மூலம் ஒன்று தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். இன்னொன்று வெளி நாட்டவர்கள் தடுப்பூசி போடும் வரை பரட்டத்தலையர்களாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள்!
அரசாங்கம் ஏதாவது ஒரு முடிவுக்கு வரவேண்டும். சிறிய தொழில் செய்பவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்களைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.
ஊரடங்கைப் போட்டுவிட்டு குழந்தைகள், பெற்றோர்கள் - இப்படி எவருமே வீட்டைவிட்டு நகரக் கூடாது என்று சொன்னால் அதுவே பெரும் தண்டனை. அப்படி நகராமல் இருந்தும் கூட தொற்றின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. அப்படி என்றால் ஊரடங்கு தோல்வியில் முடிந்ததாகத் தான் பொருள்.
இப்படி தோல்வி அடைந்த ஊரடங்கிற்காக நாட்டு மக்கள் அனைவரும் சிரமத்திற்குள்ளாக வேண்டிய அவசியமில்லை. அனவரும் தங்கள் பிழைப்பைக் கவனிக்க வேண்டிய அவசியமுண்டு.
இனியும் காலம் கடத்துவதில் பயனில்லை. நல்லதொரு முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் எப்படி நல்ல கவர்ச்சியோடு நாட்டை வலம்வருகிறார்களோ அதே போல மக்களும், குறைந்தபட்சம், பரட்டத்தலையாக இல்லாமல், முடிவெட்டி முகத்தில் விழிப்பது போல வெளிய வரவேண்டும்!
அதற்கு சிகை அலங்காரக் கடைகள் தங்களது தொழிலைத் தொடங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்!
No comments:
Post a Comment