குறிஞ்சி மலர்
பொதுவாகவே குறிஞ்சி மலர் என்றாலே அந்த மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் என்று பலர் அறிந்திருப்பார்கள்.
ஆனால் எனக்கென்னவோ குறிஞ்சி மலர் என்றாலே நாவலாசிரியர் தீபம் நா.பார்த்தசாரதியின் ஞாபகம் தான் வரும்! நான் அவருடைய தீவிர வாசகன். குறிஞ்சி மலர் நாவலையும் வாசித்திருக்கிறேன். வாசித்தது கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள்! தீபம் பத்திரிக்கையில் வெளியாகிய பல கதைகளையும், கட்டுரைகளையும் 'பைண்டிங்' செய்து வைத்திருக்கிறேன். இன்னும் உள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அந்த மலரை அவரே ஊட்டிக்குச் சென்று பல ஆபத்தான மேடு பள்ளங்களைக் கடந்து அந்த மலரை தான் கண்டுபிடித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்கு முன்னர் அப்படி ஒரு மலர் இருப்பதே யாருக்கும் தெரியாது என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக தொல்காப்பியம், குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, பரிபாடல் போன்ற இன்னும் பல தமிழ் இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்த அந்த மலர் இப்போது ஊட்டி எங்கும் நிறைந்து காணப்படுகிறது. அதற்கான காரணம் அவரே.
குறிஞ்சி மலர் புதர்வகையைச் சேர்ந்த பூ என்றும் பெரும்பாலும் மலைச்சரிவுகளில் காணப்படும் இந்தப் பூக்கள் நீல நிறத்தில் இருப்பதால் ஊட்டி என்னும் பெயரே மறைந்து இப்போது நீலகிரி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
குறிஞ்சி மலரை நான் பார்த்ததில்லை. நான் அங்கு சென்றிருந்த காலத்தில் அந்தப் பூக்கள் பூத்திருக்கவில்லை.
ஆனால் நா.பார்த்தசாரதி மலேசியா வந்த போது அவரை நான் பார்த்திருக்கிறேன். அது எனது பாக்கியமாக கருதுகிறேன்.
நான் 'குறிஞ்சி மலர்' நா.பார்த்தசாரதியைப் பார்த்திருக்கிறேன்! அது போதும்!
No comments:
Post a Comment